
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில், ராம்பன் மாவட்டத்தில் படோத் என்ற பகுதியில் பொதுமக்கள் சென்ற வாகனத்தை அடையாளம் தெரியாத இரு நபர்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இதில், சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் வேகமாகச் சென்று அருகில் இருந்த ராணுவ முகாமுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்களை தேடும் பணியை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தினர்.
இதனிடையே, வீடு ஒன்றுக்குள் புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த விஜய் குமார் என்பவரை பிணைக்கைதியாக பிடித்துவைத்துக் கொண்டனர். அந்த வீட்டை காஷ்மீர் காவல்துறையினர், ராணுவத்தினர் மற்றும் சி.ஆர்.பி.எப். கூட்டுப்படையினர் சுற்றிவளைத்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பயங்கரவாதிகளும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஒரு ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். மேலும், பயங்கரவாதிகளால் பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த விஜய்குமாரும் பத்திரமாக மீட்கப்பட்டார்.