இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது
இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் திவாரி(43). இவர் இந்து சமாஜ் கட்சியை நிறுவியவர். இவர் நேற்று மதியம் தனது இல்லத்தில் மர்மான முறையில் கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலை சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாம் மத தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(கமலேஷ் திவாரி)
இந்நிலையில், இந்தக் கொலை வழக்கு தொடர்பாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச, குஜராத் மாநில காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் பணியில் 5 பேர் பிடிபட்டனர். அதில் இருவர் விசாரணைக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டனர். மூவர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.
( டிஜிபி ஒ.பி.சிங்)
இது தொடர்பாக உத்தரப்பிரதேச காவல்துறை டிஜிபி ஒ.பி.சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்தக் கொலை தொடர்பாக குஜராத்தை சேர்ந்த மூவரை கைது செய்துள்ளோம். இவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு கமலேஷ் திவாரி ஆற்றிய உரை தங்களை புண்படுத்திவிட்டதாக கூறி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்கும் பயங்கரவாத அமைப்பிற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் அந்த நபர்களை நாங்கள் உத்தரப்பிரதேசம் அழைத்து வந்து விசாரணை செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கமலேஷ் திவாரிக்கு கடந்த 2016ஆம் ஆண்டே கொலை மிரட்டல் கடிதம் வந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.