
கேரளாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியான சோகம் நேற்று இரவு நடந்தது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் தானூர் பகுதியில், ஆறு கடலில் சென்று சேரும் ஓட்டுபுறம் தூவல் தீரம் பகுதியில் சமீபகாலமாக சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக படகு போக்குவரத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி நேற்று மாலை 6 மணிக்கு பிறகு தூவல் தீரம் படகு தளத்தில் இருந்து நாசர் என்பவருக்கு சொந்தமான படகு துவக்கப்பட்டுள்ளது. 20 பேர் செல்ல வேண்டிய அந்த படகில், சுமார் 40 பேரை ஏற்றி பயணத்தை துவங்கியிருக்கிறார்கள்.
இந்த படகு கடலோடு ஒட்டி பொழி முகம் பகுதியில் சென்ற போது திடீரென ஆற்றில் சரிந்து கவிழ்ந்தது. இதில் ஆண்கள் தண்ணீரில் குதித்து தப்பிய நிலையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் தண்ணீரில் மூழ்கினர். இந்த விபத்து நடப்பதை பார்த்த மீன்பிடி தொழிலுக்கு செல்ல தயாராக இருந்த மீனவர்கள் தங்களது படகுகளில் விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்த 9 பேரை உயிரோடு மீட்டனர். மேலும் பல பணி நேரம் போராடி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 21 பேரை மீட்டனர். தொடர்ந்து அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் மீட்கப்பட்ட 21 பேரும் உயிரிழந்தது பின்னரே தெரியவந்தது. இதனையடுத்து கவிழ்ந்த படகை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்பு படகை உடைத்து படகின் உள் பகுதியில் மாட்டிய நபர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த நிலையில் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த படகில் எவ்வளவு பேர் பயணித்தனர் என இதுவரை முறையாக தகவல் கிடைக்கவில்லை.
20 பேரை ஏற்ற வேண்டிய படகில் 40 பேரை ஏற்றியதும், விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் பயணம் செய்ததும்தான் இந்த விபத்துக்கான காரணங்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலியான குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கலை தெரிவித்ததுடன் ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையும் அறிவித்துள்ளார்.