2026 | முக்கியத் துறைகளில் ஏற்படப்போகும் மாற்றங்கள்.. ஆய்வாளர்கள் சொல்வதென்ன?
2026 ஆம் ஆண்டில் பணம் சார்ந்த பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பான்-ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளில் கடன் வட்டி வீதம் குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். டிஜிட்டல் உலகில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில், ஊதிய உயர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.
பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பான ஒன்றுதான். இன்னும் ஒருசில தினங்களில் 2026 பிறக்கப்போகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க அடுத்த ஆண்டு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று இப்பொழுதே பலரும் தங்களது காலண்டரை தயார் செய்திருப்பார்கள். அதில் செலவினம் மற்றும் சேமிப்பு தொடர்பான குறிப்புகளே அதிகம் இடம் பெற்றிருக்கும். அப்படி பணம் சார்ந்து 2026 ஆம் ஆண்டு நடைபெற போகும் மாற்றங்கள் என்ன நாம் ஏதில் கவனம் செலுத்தவேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.
பான் - ஆதார் இணைப்பு:
ஏற்கனவே ஆண்டுக்கணக்கில் ஆதாருடன் தங்களுடைய பான் கார்டை இணைத்திட வேண்டும் என்று மத்திய அரசு கூறிவருகிறது. இதற்காக பல முறை கால அவகாசசத்தை நீட்டிப்பு செய்திருந்தது. இந்நிலையில், வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதியுடன் அதற்கான கால அவகாசம் முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் பணத்தை எடுக்கவோ, பணத்தை வங்கிகளில் முதலீடு செய்யவோ வாங்கி கணக்கு புத்தகத்துடன் பான் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காலக்கெடு முடிந்தவுடன், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஆதார் இணைவு பெறாத பான் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு பணப்பரிமாற்றம், ஓய்வூதியம் பெறுவது, வருமானவரி தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படலாம் எனவே ஆதாருடன் பாண் என்னை இணைத்துவிடுங்கள் என்கின்றனர்.
வங்கிகளில் கடன் மீதான வட்டி வீதம் குறைதல்:
இந்த ஆண்டே இந்திய ரிசர்வ் வங்கி பலமுறை வங்கிகளில் பெரும் கடன் தொகைக்கான ரெப்போ விகிதத்தை குறைத்திருந்தது. இதனால் வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 5.25 சதவீதமாகக் குறைந்தது. வரும் ஆண்டுகளிலும் ரெப்போ விகிதம் குறைந்து வங்கிகளில் பெரும் கடன்களின் மீதான வட்டி விகிதமும் குறையும் என சொல்லப்படுகிறது.
டிஜிட்டல் உலகில் ஏற்படும் மற்றம்:
டிஜிட்டல் தொடர்பு விதிகளும் தேவைக்கு ஏற்ப மாறி வருகின்றன. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் போன்ற பயன்பாடுகளுக்கு சிம் கார்டு சரிபார்ப்பை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. முன்னதாக, ஜிமெயில் போன்ற மின்னஞ்சல் கணக்குகளைப் பயன்படுத்தி செயலிகளை பயன்படுத்த முடியும். ஆனால், ஜனவரி முதல் இந்த தளங்களை அணுக செல்லுபடியாகும் சிம் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், 16 வயதிற்குட்பட்டவர்கள் ஆபாச தளங்களை அணுகுவதிலும், சமூக ஊடகங்களை பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர். புதிய சிம் கார்டுகள் வாங்குவதற்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஊதிய உயர்வு:
இந்திய மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், படிகள் போன்றவற்றை மறுபரிசீலனை செய்து, பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட ஆணையமான 7வது ஊதியக் குழு கலவாதியாகவுள்ள நிலையில், 8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அமலுக்கு வரும் பட்சத்தில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான திருத்தப்பட்ட ஊதிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இதனால் அவர்களுக்கு ஊதிய உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
விலை ஏற்றமா? குறைவா?
2026 ஆம் ஆண்டும் சில பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும். இந்த ஆண்டே கார் நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலையை 2% வரை உயர்த்தி இருந்தது, இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு இது மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் மின்னணு சாதனங்கள்,தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக பொருட்களின் விலை அதிகரிக்க கூடும். விலை குறைவதென்றால் மத்திய வரி கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சமையல் சிலிண்டர்கள் போன்ற எரிபொருட்களின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.
எது எப்படியோ புத்தாண்டு வாழ்த்துகளுடன் 2026 சிறந்த ஆண்டாக அமையட்டும்.
ராஜ்குமார்.ர
