மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு
2019 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2019-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் செல்கள் குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. வில்லியம் ஜி. கெலின், சர் பீட்டர் ரேட்கிளிஃப், கிரேக் செமன்சா ஆகிய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்கள் ஆக்ஸிஜனை எப்படி நுகரும் என்ற இவர்களின் ஆய்வு பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்கு உதவும். அனீமியா, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் சிகிச்சைக்கு 3 விஞ்ஞானிகளின் ஆய்வு மிகவும் உதவும்.
இதைத்தொடர்ந்து நாளை இயற்பியல் துறைக்கும், நாளை மறுதினம் வேதியியல் துறைக்கும் பரிசுகள் அறிவிக்கப்படும். வரும் வியாழக்கிழமை இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான பரிசு அறிவிக்கப்படாததால் இந்த ஆண்டு இரண்டு பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன.
உலகமே மிகவும் எதிர்பார்க்கும் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படுகிறது என்பது வரும் 11-ஆம் தேதி தெரிய வரும். 14-ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

