நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை மீண்டும் ஒத்தி வைப்பு
நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை நிறைவேற்ற இருந்த தூக்கு தண்டனையை இரண்டாவது முறையாக ஒத்தி வைத்தது டெல்லி நீதிமன்றம்
நிர்பயா பாலியல் வழக்கில் நான்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகியோருக்கு வருகிற ஒன்றாம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு எதிராக குற்றவாளிகள் ஒவ்வொருவராக சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
அதில் முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் கடந்த 17-ஆம் தேதி நிராகரித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று முகேஷ் குமார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தூக்குத் தண்டனைக்காக காத்திருப்பவரின் வழக்கை விட வேறு எதுவும் அவசரமானதாக இருக்க முடியாது எனக் கூறி அதை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை நிறைவேற்ற இருந்த தூக்கு தண்டனையை இரண்டாவது முறையாக டெல்லி நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. மறு உத்தரவு வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது.