சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க பிரமுகர் நடத்தி வந்த கோசாலையில் பட்டினி மற்றும் போதிய மருத்துவ சிகிச்சைகள் இல்லாததால் இரண்டு நாட்களில் 200 மாடுகள் பலியாகின.
சத்தீஸ்கர் மாநிலம் தர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்புர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ் வர்மா என்பவர் அப்பகுதி பா.ஜ.க தலைவராக உள்ளார். 7 ஆண்டுகளாக ஹரிஷ் வர்மா நடத்தி வரும் கோசாலையில், கடந்த இரண்டு நாட்களில் சுமார் 200 மாடுகள் வரை உயிரிழந்துள்ளன. இதனையடுத்து, அவசர அவசரமாக ஜே.சி.பி இயந்திரம் மூலம் கோசாலையின் அருகே குழி தோண்டி இறந்த மாடுகளை யாருக்கும் தெரியாமல் புதைக்கும் நடவடிக்கையில் ஹரீஷ் வர்மா ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் அப்பகுதியில் கசிந்து, ஊடகங்களில் செய்தியாக வெளியானது.
இதனால், கால்நடைத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர். அப்போது, போதிய உணவு இல்லாமல் பட்டினியாக கிடந்தது மற்றும் சரியான மருத்துவ சிகிச்சை இல்லாததே மாடுகளின் இறப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஹரிஷ் வர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.