காதலுக்கு எதிர்ப்பு: மகளுடன் காதலனையும் சேர்த்து எரித்துக் கொன்ற கொடூர பெற்றோர்!
உத்தரப்பிரதேசத்தில் 19 வயது மகளை அவரது காதலருடன் சேர்த்து எரித்துக் கொன்ற பெற்றோர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த போலா மற்றும் பிரியங்கா இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பிரியங்காவை அவரது வீட்டில் வைத்து போலா சந்தித்துள்ளார்.
இதையறிந்த பிரியங்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், காதலர்கள் இருவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, மண்ணெண்ணெயை அறைக்குள் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் போலா மற்றும் பிரியங்கா தீயில் துடிதுடித்து கருகி இறந்தனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரியங்காவின் தந்தை, தாயார், சகோதரர் உட்பட நான்கு பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் பெண்ணின் உறவினர்கள் மேலும் ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாக உள்ளனர். போலா மற்றும் பிரியங்கா இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பண்டா கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திர பி சவுகான் கூறுகையில், பிரியங்காவை வேறொருவருக்கு திருமணம் செய்து முடிக்க அவரது பெற்றோர் முடிவெடுத்திருந்த நிலையில், போலாவும் பிரியங்காவும் கொல்லப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.