ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தற்போதைய தகவல் தெரிவிக்கிறது.
ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. இரவு நேரம் என்பதால், மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. அவசரகால பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை குழு, விமானப்படையினர் என மொத்தம் 600 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
18 ரயில் சேவைகள் ரத்து..
ஒடிஷாவில் ரயில் விபத்து நேர்ந்த பாதை முக்கியமான பாதை என்பதால் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 18 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாடு வழியாக செல்லும் சில ரயில்களும் அடக்கம். 7 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய ரயில்களில் பயணித்தவர்கள் நிலை உள்ளிட்ட விவரங்கள் குறித்து அறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.