தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச்சுவரில் லாரி மோதிய விபத்தில் 17 பேர் பரிதாபமாக பலியாயினர். 15 பேர் படுகாயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் இருந்து கட்டிடத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, மகாராஷ்டிரா மாநிலம் தானே-வுக்குச் சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் 35 தொழிலாளர்கள் இருந்தனர். மும்பை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வண்டி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் சதாரா மாவட்டத்தில் உள்ள கண்டாலா அருகே வந்துகொண்டிருந்தபோது, தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 17 பேர் உடல்நசுங்கி பலியாயினர். 15 பேர் படுகாயமடைந்தனர்.
அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்க ள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் பணி நடந்துவருகிறது. டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.