1,000 கோடி ரூபாய் நஷ்டம்! 156 சாலைகள் முடக்கம் - 88 பேர் பலி! கோர முகம் காட்டிய பருவமழை!
செய்தியாளர் - கார்த்திகேயன்
வடகிழக்கு பருவமழை தான் தமிழகத்தில் பெருமழையை ஏற்படுத்துகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை தான் ஆதிக்கம் செலுத்தும். அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை, தற்போது வரை பெரும் மழைப்பொழிவை ஏற்படுத்தியுள்ளது. வடஇந்தியாவில் உள்ள டெல்லி, ஜார்கண்ட், மத்திய மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் அதிகனமழை பெய்து வருவதால், சில சமயங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையே விடுக்கப்பட்டிருந்தது.
இப்படியான சூழலில், ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையின் காரணமாக, அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள உள்கட்டமைப்புகள் நிலைகுலைந்து போயுள்ளது. நிலச்சரிவு, வெள்ளம் போன்ற காரணங்களால் மாநிலங்கள் முழுவதும் 156 சாலைகள் முற்றிலும் முடக்கப்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக மண்டி மாவட்டத்தில் 54 சாலைகளும், குல்லு மாவட்டத்தில் 43 சாலைகளும், சம்பா மாவட்டத்தில் 10 சாலைகளும், சிர்மூர் மாவட்டத்தில் 7 சாலைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், சிம்லா, காங்கரா, உனா ஆகிய மாவட்டங்களில் தலா 6 சாலைகளும், லாகுல், ஸ்பித் ஆகிய பகுதிகளில் தலா 3 சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
இதனால் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், பயணத்திற்காகவும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதுமட்டுமின்றி, நிலச்சரி, வீடு இடிந்து விழுதல் போன்ற பல்வேறு விபத்துகளில் இரண்டு மாதங்களில் மட்டும் 88 பேரின் உயிரை, கனமழை காவு வாங்கியுள்ளது.
மேலும், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது சொத்துக்கள் சேதமடைந்திருப்பதன் மூலம், மாநில அரசுக்கு சுமார் ஆயிரத்து 108 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சிம்லா வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், வரும் ஆகஸ்டு 26-ஆம் தேதி வரை, கனமழை பெய்யும் என்றும், 50 மி.மீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் சவாலுக்கு மத்தியில் சீரமைப்பு பணிகள் நடந்து வரும் வேளையில், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும், மலைப்பகுதிகளில் பயணம் செய்யும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

