இலங்கை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்களை, ஒரு படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மீனவர்கள்
மீனவர்கள்pt desk

செய்தியாளர்: அ.ஆனந்தன்

காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று நள்ளிரவு இலங்கை காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ஒரு படகை மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து படகில் இருந்த ஓட்டுநர் உட்பட 15 பேர் மீது எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்கள் பயன்படுத்திய படகை பறிமுதல் செய்து காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

boat
boat pt desk

இதையடுத்து மீனவர்கள் 15 பேரையும் யாழ்பாணம், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இலங்கை கடற்படையினர் படகை பறிமுதல் செய்ய முயன்ற போது அதிவேகமாகச் சென்றதால் படகில் இருந்த ஒரு மீனவர் இலங்கை கடற்படையால் கடுமையாக தாக்கப்பட்டு காலில் காயமடைந்தார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 14 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் 14 மீனவர்களை வரும் 27ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் மருத்துவமனை சிகிச்சையில் உள்ள ஒரு மீனவரை மல்லாகம் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டதும் அதில் ஒரு மீனவர் கடுமையாக தாக்கப்படுள்ளதை அறிந்த சக மீனவர்களும் மீனவ குடும்பங்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகையும் விடுவிக்க மீனவ சங்க அமைப்புகளும், மீனவர்களின் உறவினர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com