அசாமில் கடும் வெள்ளப்பெருக்கு - 141 வனவிலங்குகள் உயிரிழப்பு
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காஸிரங்கா தேசிய வனவிலங்கு பூங்காவில் இதுவரை 141 வனவிலங்குகள் இறந்துள்ளன.
அசாம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அசாம் மாநிலத்திலுள்ள பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அசாம் மாநிலத்திலுள்ள காஸிரங்கா வனவிலங்கு பூங்காவிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள வனவிலங்குகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.
மேலும் இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 141 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவற்றில் காஸிரங்கா பகுதியில் காணப்படும் அறியவகை காண்டாமிருகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் இதுவரை 12 காண்டாமிருகம் இறந்துள்ளன.
அத்துடன் 9 சாம்பார் மான்கள், 101 பன்றி மான்கள் (ஹாக் மான்), ஒரு யானை உள்ளிட்ட 141 வனவிலங்குகள் இதுவரை வெள்ளத்தால் இறந்துள்ளன. காஸிரங்கா பூங்காவின் 90 சதவிகித பகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.