மோசமான சாலைகளால் 5 ஆண்டுகளில் 14 ஆயிரம் பேர் உயிரிழப்பு

மோசமான சாலைகளால் 5 ஆண்டுகளில் 14 ஆயிரம் பேர் உயிரிழப்பு
மோசமான சாலைகளால் 5 ஆண்டுகளில் 14 ஆயிரம் பேர் உயிரிழப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் மோசமான சாலைகளால் நேரிட்ட விபத்துகளில் 14 ஆயிரத்து 926 பேர் உயிரிழந்தது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கனோர் பலியாவதற்கு காரணமாக விபத்துகள் அமைகின்றன. ஒரு நொடிப் பொழுதில் அனைத்தையும் தலைகீழாக மாற்றி, பல உயிர்களை பறித்துவிடும் கொடூரமாக விபத்துகள் அமைகின்றன. ஒரு விபத்தில் 5 பேர் பலி, 10 பேர் பலி என்ற செய்தியாக பார்ப்பதைவிட, அந்தப் பத்து உயிர்களும் ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினர்கள், அவர்களை நம்பி பலர் உள்ளனர் என்று ஆராய்ந்து பார்த்தால் அதன் வலி புரியும். 

நாட்டில் நோய்களால் இறப்பவர்கள், வயது முதுமையால் இறப்பவர்கள், தற்கொலை செய்துகொள்பவர்கள் என்பவர்களுக்காக பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொள்ளும் பலரும் விபத்துகளை எளிதில் கடந்து செல்கின்றனர். இந்த விபத்துகள் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது மோசமான சாலைகள்தான். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு மதன் பி தாக்கூர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எல்லையிலோ, பயங்கர‌வாதிகளாலோ கொல்லப்படுவோரைக் காட்டிலும், மோசமான சாலைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் இருப்பதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

2013 தொடங்கி, 2017 வரையிலான காலகட்டத்தில் அதிக உயிரிழப்புகள் நேர்ந்திருப்பது அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். மோசமான சாலைகளால் நேரிடும் விபத்துகள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com