இத்தாலியிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்த விமானத்தில் பயணித்த 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இத்தாலியிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் 179 பயணிகள் பயணம் செய்த விமானம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸுக்கு வந்தடைந்தது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அந்த விமானத்தில் பயணித்த 179 பயணிகளில், 125 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, இந்த தகவலுக்கு ஏர் இந்தியா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில், ''இத்தாலியிலிருந்து அமிர்தசரஸூக்கு வந்த ஏர் இந்தியா விமானத்திலிருந்த 125 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் தவறானது. ஆதாரமற்றது. ஏர் இந்தியா சார்பில் இத்தாலியிலிருந்து எந்த விமானமும் இயக்கப்படவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா உறுதியான அனைவரின் மாதிரிகளும் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.