12 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம் - 2 இளைஞர் உட்பட மூவர் இறந்ததால் சோகத்தில் மூழ்கிய குஜராத்!

குஜராத்தில், 12 வயது மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்புக்கான படம்
மாரடைப்புக்கான படம்புதிய தலைமுறை

குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துஷ்யந்த் பிப்ரோதர். 12 வயதான இந்தச் சிறுவன், அங்குள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (செப்.12) அதிகாலை 5:30 மணியளவில் தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுவனது பெற்றோர், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். துஷ்யந்தின் திடீர் மரணத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த கிராமமும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது.

அதேபோல், ராஜ்கோட்டை சேர்ந்த 23 வயதான நிமித் சத்ரானி என்பவர் சாஸ்திரிநகர்-அஜ்மீரா பகுதியில் உள்ள சாலையில் நின்று கொண்டிருந்த போது நெஞ்சு வலியால் சரிந்து விழுந்துள்ளார். சாலையில் திடீரென மயங்கி விழுந்த அவரை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், ராஜ்கோட்டை சேர்ந்த 24 வயதான ஜாஸ்மின் வகாசியா என்பவர், கோகதாத் கிராமத்தில் உள்ள அவரது உறவினரின் தொழிற்சாலையில் உயிரிழந்துள்ளார். வழக்கம் போல், தொழிற்சாலைக்கு சென்று அன்றாட வேலைகளில் ஈடுபட்டு வந்த அவர், திடீரென மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஜி மாரிமுத்து
ஜி மாரிமுத்து PT

சமீபகாலமாக, மாரடைப்பு இறப்புகள் அதிகரித்து வருவது, அனைவரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது. சமீபத்தில்கூட நடிகரும் இயக்குநருமான மாரிமுத்துகூட, மாரடைப்பால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com