ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் இந்தியாவின் முதல் வாக்காளர்
இந்தியாவின் முதல் வாக்காளர் எனக் கருதப்படும் 102 வயதான ஷ்யாம் சரண் நேகி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1950 ஆம் ஆண்டு குடியரசு ஆனது. இதையடுத்து 1952 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், டெல்லியிலிருந்து நீண்ட தூரத்தில் இருப்பதாலும் அடர்த்தியான பனிப்பொழிவு உள்ளிட்ட தட்பவெப்ப நிலையை கருத்தில் கொண்டும் ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் மட்டும் 1951 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே தேர்தல் நடத்தப்பட்டது.
அப்போது கின்னவூர் மாவட்டத்திலுள்ள மண்டி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கல்பா பகுதியில் இருந்த வாக்குச்சாவடியில் பள்ளி ஆசிரியராக இருந்த ஷ்யாம் சரண் நேகி அதிகாலையிலேயே காத்திருந்து சரியாக காலை 7 மணிக்கு இந்தியாவின் முதல் வாக்காளராக அன்றைக்கு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
இந்நிலையில் தற்போது 102 வயதாகும் அவர், கின்னவூர் மாவட்டத்திலுள்ள கல்பா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களித்தார். அப்போது மேளதாளம் முழங்க தேர்தல் அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.