கர்நாடக மாநிலம் குல்பர்கா பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் இருந்த ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாய் மதிப்பிலான 1 டன் 350 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து பெங்களூர் மத்திய மண்டல போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மகாராஷ்டிரா எல்லையில் உள்ள குல்பர்கா மாவட்டத்தில் உள்ள குல்பர்கா பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக பெங்களூர் மத்திய மண்டல போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் குல்பர்கா பகுதியில் கடந்த சில நாட்களாக போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அந்த நிலையில் குல்பர்கா பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் போதை பொருளான கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சோதனை நடத்தியபோது கோழிப்பண்ணையில் பூமிக்கு அடியில் ரகசிய பதுங்கு குழி அமைத்து அதற்குள் பொட்டலம் பொட்டலமாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த பெங்களூர் மத்திய மண்டல போலீசார், கோழிப்பண்ணை உரிமையாளர், அங்கு பணியாற்றும் நபர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பலர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களின் எடை 1 டன் 350 கிலோ 300 கிராம் என்றும் இவற்றின் மதிப்பு 6 கோடி ரூபாய் எனசும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக மிகப் பெரிய அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.