தீவிரவாதத்தால் நானும் என் சகோதரியும் சிறு வயதிலேயே தந்தையை இழந்தோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்தப் புல்வாமா தாக்குதலில் உத்தரப் பிரதேச மாநிலம், ஷாம்லி நகரைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் அமித் குமார் கோரி கொல்லப்பட்டார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஆகியோர் அமித் குமார் கோரியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது, ராகுல் காந்தி, சிஆர்பிஎப் குடும்பத்தாரிடம் நானும் எனது சகோதரியும் தீவிரவாதத்தால் சிறுவயதிலேயே தந்தையை இழந்தோம் என்றும் அதனால் உங்களின் மனவேதனை எங்களுக்கு புரிகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் “நாங்கள் உங்களுக்கு எப்போதும் துணை இருப்போம். தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சி அளிக்கும். இது உங்களுக்கு சோகமான நாள் என்றாலும், தேசத்துக்கே உங்களின் மகன் பெருமை சேர்த்துள்ளார். நாட்டுக்காக உயிர் நீத்த உங்கள் மகன் மீது தேசமே அன்பு வைத்துள்ளது. அவரை நினைத்து தேசம் பெருமை கொள்கிறது. தாக்குதலில் பலியான அனைத்து வீரர்களும் பெருமைக்குரியவர்கள்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய பிரியங்கா காந்தி, “என் சகோதரர் கூறியது போன்று உங்களின் வலிகள் எங்களுக்கு புரிகிறது. நாங்கள் மட்டுமல்ல இந்தத் தேசமே உங்களுக்கு ஆதரவு அளிக்கிறது. தனிமைப்படுத்தப்பட்டோம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.