”எங்கள் குடும்பத்தினரை துன்புறுத்தினாலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம்” - ராகுல்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட லக்கிம்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இன்று செல்லவிருந்த நிலையில், அவரது பயணத்திற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து டெல்லியில் வைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜீப்பால் மோதி விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் கொல்லப்பட்ட வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. குறிப்பாக அதன் பின்னணியில் உள்ள மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டவில்லை. இச்சம்பவம் நடந்த லக்கிம்பூர் செல்ல எனக்கு உ.பி. அரசு விதித்த தடை உத்தரவு பொருந்தாது. அரசியல் தலைவர்களை உத்தரப்பிரதேசத்தில் அனுமதிக்க மறுப்பது ஏன்? எப்படியும் நாங்கள் லக்கிம்பூர் சென்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளோம்.
என்னையும் என் குடும்பத்தினரையும் துன்புறுத்தினாலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம். காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை, இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நியாயம்தான் கேட்கிறோம். மட்டுமன்றி எதிர்க்கட்சிகளின் பணியே, அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுதான். எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் தான் இன்று அரசு தரப்பில் இந்த அளவிற்கு கூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் அரசு கட்டுப்படுத்துகிறது. இவ்விவகாரத்தில் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு தனது அகங்காரத்தின் காரணமாக நிராகரிக்கிறது” என்றார்.

