ஒரே நாளில் கலைந்து போன கேரள தம்பதியின் கனவு : படிக்க சென்ற இடத்தில் பலி

ஒரே நாளில் கலைந்து போன கேரள தம்பதியின் கனவு : படிக்க சென்ற இடத்தில் பலி
ஒரே நாளில் கலைந்து போன கேரள தம்பதியின் கனவு : படிக்க சென்ற இடத்தில் பலி

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தில் கேரள பெண் ஒருவரும் உயிரிழந்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படிக்க சென்ற இடத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கடந்த 15 ஆம் தேதி நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் தீவிரவாதிகள் அதிரடி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கேரளாவை சேர்ந்த அன்சி அலிபாவா உட்பட 50 பேர் உயிரிழந்தனர். 5 பேர் இந்தியர்கள் என கண்டறியப்பட்டது. 

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்களூரைச் சேர்ந்தவர் அப்துல் நாசர். இவரது மனைவி அன்சி அலிபாவா. 25 வயதாகும் அன்சி அலிபாவாவுக்கு வேளாண் வர்த்தக மேலாண்மையில் முதுகலைப் படிப்பு படிக்க ஆசை. அதனால், கடந்த ஆண்டு 48 ஆயிரம் டாலர் கடன் வாங்கி, நியூசிலாந்துக்கு வந்து சேர்ந்தனர். 

அங்குள்ள லிங்கான் பல்கலைக்கழகத்தில் அன்சி சேர்ந்தார். அவருடைய கணவர் அப்துல் நாசர் சூப்பர்மார்க்கெட்டில் வேலை செய்து மனைவியின் படிப்புக்கு உதவி வந்துள்ளார். மூன்று வாரங்களுக்கு முன்பு தான் அந்த படிப்பை படித்து முடித்து பட்டம் பெற்றார். படிப்பு முடிவடைந்த நிலையில் இனி நல்ல வேலைக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக தங்கி விடலாம் என்ற பல கனவுகளுடன் இருந்துள்ளனர். ஆனால் அவர்களது கனவு ஒரே நொடியில் கலைந்து விட்டது.

இதுகுறித்து அப்துல் நாசர் கூறுகையில், “மசூதியில் இருவரும் தனித்தனி பகுதியில் அமர்ந்து இருந்தோம். திடீரென ஒரு சத்தம் கேட்டவுடன், வெளியே குழந்தைகள் பலூன் வெடித்திருக்கலாம் என்று கருதினேன். பின்னர், பயங்கர ஆயுதங்களை பார்த்ததும், 300 க்கும் மேற்பட்டோர் வாசலை நோக்கி ஓடத் தொடங்கினர்.

நான் வாசல் அருகே இருந்தேன். கதவில் உள்ள கண்ணாடியை சிலர் உடைத்தனர். உடனே நான் வெளியேறினேன். பிறகு பக்கத்து வீட்டுக்கு சென்று, தொலைபேசியில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன். மீண்டும் மசூதிக்கு வந்து, அன்சியை தேடினேன். அவள் அசைவற்று கிடப்பதை பார்த்து அவளை நோக்கி ஓடினேன்.

ஆனால், ஒரு போலீஸ்காரர் தடுத்து விட்டார். அடுத்த 24 மணி நேரத்தில், எங்கள் வீட்டுக்கு வந்த போலீசார், அன்சி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவள் எங்காவது சிகிச்சை பெற்று வருவாள் என்று நினைத்து இருந்தேன். ஏதேனும் அதிசயம் நடக்கும் என்று நினைத்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அன்சி உடலை அவளது பெற்றோரின் இல்லத்துக்கு அனுப்ப சொல்லி உள்ளேன்.” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com