“பினாமி பெயரில் சொத்துகளை குவித்துள்ளேனா?” - எதிர்க்கட்சிகளுக்கு மோடி சவால்
வெளிநாட்டு வங்கிகளில் தாம் கோடிகளை குவித்து வைத்திருப்பதாகவோ, அளவுக்கு அதிகமான சொத்துகளை சேர்த்து வைத்திருப்பதாகவோ நிரூபிக்க முடியுமா? என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி சவால் விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பாலியாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, பினாமி பெயரில் சொத்து, பண்ணை வீடு, வணிக வளாகம், வெளிநாட்டு வங்கியில் பணம் அல்லது வெளிநாட்டில் அசையா சொத்து, ஆடம்பர கார் என தனது பெயரில் அளவுக்கு அதிகமான சொத்துகள் இருப்பதை எதிர்க்கட்சிகளால் நிரூபிக்க முடியுமா என சவால் விடுத்தார்.
தனக்கு எதிரான பொய்யான விவகாரங்களை கட்டவிழ்த்துவிடும் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் வாக்குகள் மூலம் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார். மேலும் மெகா கூட்டணி அமைத்திருக்கும் எதிர்க்கட்சிகள் ஜாதி அரசியலை செய்து, தங்களுக்கும், தங்களது உறவினர்களுக்கும் அரண்மனைகளையும், பங்களாக்களையும் கட்டுவதாக அவர் குற்றம்சாட்டினார்.