ம.பி: ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் 4பேர் பலி என உறவினர்கள் புகார்; நிர்வாகம் மறுப்பு
மத்தியப் பிரதேசத்தில் பர்வானி மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் திடீரென்று நிறுத்தப்பட்டதால், நான்கு பேர் உயிரிழந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர்.
ஆக்சிஜன் செல்லும் குழாய்களில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக, திடீரென்று ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் மத்தியப் பிரதேச மாநிலத்தின் பர்வானியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் நான்கு கொரோனா நோயாளிகள் இறந்தனர் என்று அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். ஆனால் மாவட்ட அதிகாரிகள், ஒருவர் மட்டுமே இறந்துவிட்டார் என்றும், அதுவும் இருதய அடைப்பு காரணமாகவே உயிரிழப்பு நடந்தது என்றும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில், குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஆக்சிஜன் ஓட்டம் நிறுத்தப்பட்டதாக நோயாளிகளின் உறவினர்கள் கூறினர்.
இதனிடையே, மருத்துவனையின் மத்திய ஆக்சிஜன் சப்ளை அமைப்பில் ஏற்பட்ட கோளாறுகளை மெக்கானிக் உடனடியாக சரிசெய்தார், இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, ஒருவர் மட்டும் இதய அடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று பர்வானி கூடுதல் கலெக்டர் லோகேஷ் குமார் ஜாங்கிட் ஒப்புக்கொண்டார். ஆக்சிஜன் சப்ளை இல்லாததால் மத்தியப் பிரதேசத்தில் இறப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங்கும் கூறியிருந்தார்.