கேரளாவில் திருட வந்த வீட்டில் ஒன்றும் இல்லாத கோபத்தில், திருடன் எழுதி வைத்த குறிப்பைக் கொண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரளாவில் கடந்த சில வாரங்களாகவே திருட்டு சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக கொல்லம் மாவட்டம் பரவூர் பகுதியில் 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. திருடன் யார் என்பதை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு பெரும் சவாலாகவே இருந்தது. இந்த நிலையில் திருடச்சென்ற இடத்தில் திருடர் எழுதி வைத்த குறிப்பைக் கொண்டு, காவல்துறையினர் கைது செய்தனர்.
கொல்லத்தை சேர்ந்த ஜோஸ் என்ற 'மொட்டை' ஜோஸ் அந்த குறிப்பை திருடச் சென்ற வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அதில், அடுத்த முறை வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றால், எடுப்பதற்கு வசதியாக நகைகள் உள்ளிட்ட பொருட்களை வைத்துவிட்டுச் செல்லவும் என்றும், இல்லையென்றால் மீண்டும் மீண்டும் வீட்டின் கதவை உடைக்க வேண்டியிருக்கும் எனவும் ஒரு துண்டு காகிதத்தில் எழுதிவிட்டு சென்றுள்ளார். இதைக் கைப்பற்றிய காவலர்கள் கையெழுத்து மற்றும் கைரேகைகளை வைத்து திருடியது மொட்டை ஜோஸ்தான் என உறுதி செய்தனர்.
இதையடுத்து மற்றொரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த மொட்டை ஜோஸ்-சை காவல்துறையினர் பிடித்தனர். ஏற்கெனவே பல்வேறு திருட்டு சம்பவங்களில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.