‘அதிக அகதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறும்’- சிஏஏக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் உலகிலேயே அதிக அகதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 5 அமைப்புகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நாளை மறுநாள் விவாதம் நடைபெறுகிறது.
வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வரும் இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு, இந்திய குடியுரிமை வழங்கும் வகையில், குடியரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 5 அமைப்புகள், 6 தீர்மானங்களை கொண்டு வந்துள்ளன. இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச மனித உரிமை குறித்த விதிகளுக்கும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையே 2005-ல் நிறைவேற்றப்பட்ட மனித உரிமை குறித்த ஒப்பந்தத்துக்கும் எதிராக இருப்பதாக தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால், உலக அளவில் அதிக அகதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறும் என்றும் இது மிகப்பெரிய மனிதப் பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களை அழைத்து பேசாமல், பெரும்பாலான தலைவர்கள், அவர்களை மிரட்டுவதாகவும் தீர்மானம் கூறுகிறது. 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள் தேசியவாதம் என்ற இலக்கை நோக்கி செல்வதாகவும், ஜம்மு-காஷ்மீரில் 370ஆவது அரசியல் பிரிவு நீக்கப்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசல்ஸ் நகரில் புதன்கிழமை கூடும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்தத் தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்று, வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் அது இந்திய அரசு, இந்திய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்படும்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியா, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் முற்றிலும் உள்நாட்டு விவகாரம் எனவும் கூறியுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளவர்கள், அதை நிறைவேற்றுவதற்கு முன்பு முழு விவரங்களை தங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.