“101 சவரன் நகை; 50 லட்சம் ரொக்கம்” - ஜூபியை குறிவைத்து பரவிய வதந்தி

“101 சவரன் நகை; 50 லட்சம் ரொக்கம்” - ஜூபியை குறிவைத்து பரவிய வதந்தி
“101 சவரன் நகை; 50 லட்சம் ரொக்கம்” - ஜூபியை குறிவைத்து பரவிய வதந்தி

கேரளாவில் இளம் தம்பதிக்கு எதிராக வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தியால் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் ஆழ்ந்துள்ளனர்.

கேரளா செம்பன்தொட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஜூபி ஜோசப். இவர் ஷார்ஜாவில் வேலை செய்துவருகிறார். இவருக்கும் கேரளாவிலுள்ள செருபுழா பகுதியைச் சேர்ந்த அனூப் செபாஸ்டியன் என்பவருக்கும் இந்த மாதம் 4 ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்ததுள்ளது. இவர்கள் திருமணத்தின் போது எடுத்துகொண்ட நிழற்படம் ஒன்று மலையாள செய்தித்தாளில் வெளியானது.

அதன் பிறகு இதே மணமக்களின் நிழற்படம் வாட்ஸ்அப்பிலும் டரெண்ட் ஆனாது. கூடவே ஒரு செய்தியும் வலம் வந்தது. அதில், “இந்தப் புகைப்படத்திலிருக்கும் ஆணின் வயது 25. இந்தப் பெண்ணின் வயது 48. இருவரும் மணம் புரிந்து கொண்டுள்ளனர். காரணம் வரதட்சணை. இவரை மணந்து கொள்வதற்காக வரதட்சணையாக மணமகனுக்கு 101 சவரன் நகையும் ரொக்கமாக ரூ.50 லட்சம் பணமும் அளிக்கப்பட்டுள்ளது. காரணம் இந்தப் பெண்ணின் சொத்து மதிப்பு ரூ.25 கோடி” என ஒரு தகவல் பரப்பப்பட்டது. ஊர் முழுவதும் வலம் வந்த இந்தச் செய்தி இறுதியில் மணமக்கள் வாட்ஸ்அப்பிற்கும் போய் சேர்ந்துள்ளது. அதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம், அந்தச் செய்தியில் உண்மையில்லை. அத்தனையும் ஜோடனை.

உண்மையில், ஜூபி ஜோசப்பிற்கு வயது 27தான் ஆகிறது. அனூப்பிற்கு வயது 29. வெளியான புகைப்படத்தில் ஜூபி, மணமகன் அனூப்பை விட தோற்றத்தில் வயதானவராக தெரிகிறார். அந்த ஒரு காரணம்தான் இந்த வதந்திக்கு அடிப்படை ஆதாரம். இந்தப் போலிச் செய்தியால் அனூப்பிற்கு நிறைய பேர் தொலைப்பேசி செய்துள்ளனர். இது குறித்து விசாரித்துள்ளனர்.  இந்த நிகழ்வினால் மிகுந்த மன வருத்ததிற்கு அனூப் உள்ளாகியுள்ளார்.


 
உடனே ஜூபி மற்றும் அனூப் அருகிலுள்ள கன்னூர் காவல்நிலையத்தில், தங்களை பற்றி தவறாக பரப்பப்பட்ட வதந்திக்கு  எதிராக புகார் அளித்துள்ளனர். இதனை விசாரித்த காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து தெரிவித்த கன்னூர் எஸ்பி “இந்த வழக்கில் தொடர்புடையவர்களை காவல்துறை விரைவில் கண்டுபிடிக்கும்” எனக் கூறியுள்ளார்.

இது குறித்து மணமக்கள் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் “இந்தப் போலி செய்தியை பரப்பியவரை நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். ஏனென்றால், இது ஜூபிக்கு நடந்த அநீதிக்காக மட்டுமல்ல; உலகெங்கும் உள்ள பெண்களுக்கு எதிராக நடக்கும் தவறுகளுக்கு அது ஒரு பாடமாக அமையும். மேலும் காவல்துறை குற்றவாளியை இரண்டு நாட்களில் கண்டுபிடித்துவிடுவார்கள் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com