‘மோடியின் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன்’ - பாக். தங்கை குயாமர் வாழ்த்து
சகோதரர் பிரதமர் மோடியின் வெற்றிக்காகவும் அவரின் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்வதாக அவரது ரக்ஷா பந்தன் சகோதரி குயாமர் மொஹ்சின் செயிக் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் சகோதரிகள் தங்களது சகோதர்களுக்கு ராக்கி கயிறு கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள். இம்முறை சுதந்திர தினமான இன்று ரக்ஷா பந்தன் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு ரக்ஷா பந்தன் பண்டிக்கைக்கும் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வரும் சகோதரி குயாமர் மொஹ்சின் செயிக் பிரதமருக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “ஒவ்வொரு முறையும் ரக்ஷா பந்தன் அன்று எனது மூத்த சகோதரரான மோடிக்கு ராக்கி கட்டுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிரதமர் மோடி எடுக்கும் நல்ல முடிவுகளை உலகம் அங்கிகரிக்கும். மேலும் அவர் நீண்ட ஆயுளுடனும் வெற்றியோடும் வாழ கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
குயாமர் மொஹ்சின் செயிக் பாகிஸ்தானிலிருந்து வந்து இந்தியரை திருமணம் செய்து கொண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ரக்ஷா பந்தன் அன்று பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.