இந்துமத நம்பிக்கையின்படி வதந்தி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்” - அமித் ஷா ட்வீட்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு உடல்நலக்குறைவு என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவல் தொடங்கிய நாளிலிருந்தே உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகம் வெளியே தென்படவில்லை. இதனையடுத்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதாகவும், அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமித் ஷா தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “ கடந்த சில நாட்களாகவே என்னுடைய உடல்நலம் குறித்து சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பி வந்தனர். இதனால் சிலர் எனது உடல்நலத்திற்காகப் பிரார்த்தனை செய்தனர். நாடே கொரோனா தொற்றிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது. நான் உள்துறை அமைச்சராக எனது பணியில் மும்மரமாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஆகவே இந்த வதந்திகளில் எல்லாம் கவனம் செலுத்த எனக்கு நேரமில்லை.
என்னுடைய கவனத்திற்கு இந்தச் செய்திகள் வந்த போது, என் குறித்த கற்பனையான எண்ணங்களில் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்து விட்டுப் போகட்டும் என விட்டு விட்டேன். அதனால்தான் நான் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.ஆனால் கடந்த இரண்டு நாட்களாக என்னுடைய நலம் விரும்பிகள் மற்றும் தொண்டர்கள் என்னுடைய ஆரோக்கியம் குறித்து அக்கறையோடு கேள்வி எழுப்புகின்றனர். அவர்களைக் கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். நான் நலமாக உள்ளேன். எனக்கு எந்த நோய்த் தொற்றும் ஏற்படவில்லை.
என்னைக் குறித்த வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது எனக்கு எந்த அக்கறையும் இல்லாத போதும், அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்து மதத்தின் நம்பிக்கையின் படி இது போன்ற வதந்திகள் எனது ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆகவே இது போன்ற அர்த்தமற்ற காரியங்களில் ஈடுபடும் மக்கள் அதனைத் தவிர்த்து என்னுடைய வேலையைத் தொடர விடுவதோடு அவர்களும் அவர்களது வேலையைப் பார்ப்பார்கள்” என நம்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

