ஒரேநேரத்துல 2 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது சரியா? #TandemNursing பற்றி தெரிஞ்சுகோங்க அம்மாக்களே!

Tandem Nursing பற்றி நடிகர் நகுலின் மனைவியும் இன்ஸ்டா பிரபலமுமான ஸ்ருதி தன் பக்கத்தில் தொடர்ந்து பேசிவருகிறார். இது என்ன, இதுபற்றி மருத்துவர்கள் சொல்வது என்ன என்பதை, இங்கே பார்ப்போம்!
Tandem Nursing
Tandem Nursing Pinterest

நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவொன்று ஷேர் செய்திருந்தார். நெகிழ்ச்சிகரமான அந்த வீடியோவில், வெவ்வேறு வயதுடைய தன் இரு குழந்தைகளுக்கும் ஒரேநேரத்தில் தாய்ப்பாலூட்டும் காட்சிகளை பகிர்ந்து, மிக உருக்கமாகவும் நேர்த்தியாகவும் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவும், கேப்ஷனும் பலராலும் வரவேற்கப்பட்டு வைரலானது.

அந்த வீடியோ வழியே ஸ்ருதி சொன்ன விஷயம் இதுதான் – “என் இரு குழந்தைகளுக்கும் ஒரேநேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென நான் முடிவெடுத்தபோது, அது சிரமம் என்று எனக்கே தெரிந்தது. அதிலும் Toddler (சற்று வளர்ந்த குழந்தை) மற்றும் Infant (பச்சிளம் குழந்தை) இருவருக்கும் ஒரேநேரத்தில் தாய்ப்பால் கொடுத்தால், என்ன நடக்குமென எனக்கு தெரியும். அதை நான் செயல்படுத்தியபோது, நிறைய பிரச்னைகள் வந்தன. தூங்கக்கூட முடியாமல் பல நாட்கள் சிரமப்பட்டேன். ஆனால்... அதில் நன்மைகளும் இருந்தன. அவற்றை சொல்ல விரும்புகிறேன்.

Sruti Nakul
Sruti Nakul@srubee | Instagram

அந்தவகையில் அந்த தருணங்களில் என்னுடைய இரு குழந்தைகளுக்கும் இடையே நல்ல இணக்கமும் பிணைப்பும் ஏற்பட்டது. இருவரும் தாய்ப்பால் குடித்துக்கொண்டே, ஒன்றாக விளையாண்டார்கள். அவர்கள் பாஷையில் பேசிக்கொண்டார்கள். ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறினார்கள். இவையாவும் தாயாக என்னை வலிமைப்படுத்திக்கொள்ள உதவியது” .

ஸ்ருதியின் இந்த பதிவு வைரலான நிலையில், பலரும் இப்படி ஒரேநேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது சரியா என்று கேள்வியெழுப்பத்தொடங்கினர்.

ஏனெனில் பல நேரங்களில் இரட்டை குழந்தைகளின் அம்மாக்கள் மட்டுமே இப்படி ஒரேநேரத்தில் 2 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பார்கள். அந்தவகையில் ஸ்ருதியின் இந்த Tandem Nursing (ஒரேநேரத்தில் வெவ்வேறு வயதுடைய இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது) வீடியோ பலருக்கும் புதிதாக இருந்தது. இது ஆரோக்கியமானதா என்ற கேள்வியும், இப்படி தாய்ப்பால் கொடுக்கையில் இரண்டாவது குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்குமா என்ற கேள்வியும் பல அம்மாக்களுக்கு எழுந்தது.

இதை அறியும் முன், தாய்ப்பால் குறித்து உலக சுகாதார நிறுவனம் சொல்லும் விஷயங்களை அறிந்துகொள்வோம்.

WHO மற்றும் UNICEF ஆகியவை சொல்பவை:

குழந்தைகள் பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். அதன்பின், முதல் 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் மட்டுமே அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதாவது தண்ணீர் உட்பட வேறு உணவுகள் அல்லது திரவ உணவுகளும் அந்த நேரத்தில் வழங்கப்பட வேண்டாம்.

Breastfeeding
BreastfeedingFreepik

வளரும் குழந்தைகளுக்கு (Infant) தேவைக்கேற்ப மட்டுமே தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். அதுவும் அந்தக் குழந்தை விரும்பும் போதுதான். இவர்களுக்கு பாசிஃபையர்களை பயன்படுத்தக்கூடாது.

WHO மற்றும் UNICEF

தாய்ப்பால் பாதுகாப்பானது மற்றும் சுத்தமானது என்பதால், பல நோய்களிலிருந்து குழந்தைகளை காக்க இது உதவும்.

‘தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் கிடைக்கும் பலன்கள்’:

இவை, (centers for disease control and prevention-ஆல் குறிப்பிடப்படுபவை)

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தடுக்கப்படும் நோய்கள்:

ஆஸ்துமா, உடல்பருமன், டைப்  1 டயாபடீஸ், தீவிர மூச்சுப்பிரச்னைகள், சில காது பிரச்னைகள், குடல் தொடர்பான பிரச்னைகள் (வயிற்றுப்போக்கு / வாந்தி)

Breastfeeding
BreastfeedingFreepik
தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களுக்கு தடுக்கப்படும் நோய்கள்:

உயர் ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய், கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய்"

சரி விஷயத்துக்கு வருவோம். குழந்தைகள் மனநல மருத்துவரான பூங்கொடி பாலா, ‘ஒரேநேரத்தில் இரு வேறு வயதுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் பின்னுள்ள உளவியல் பலன்கள்’ பற்றி நம்மிடையே சில தகவல்கள் பகிர்ந்துகொண்டார். கூடவே, யாரெல்லாம் இவ்வகை தாய்ப்பால் கொடுப்பதை செய்யலாம் என்றும் அறிவுரை கூறினார்.
குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா
குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலாPT Desk

அவர் சொன்னது, “இதுபோன்று தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைகளுக்குள் பிணைப்பை ஏற்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்ட தகவலோ ஆய்வு முடிவுகளோ நம்மிடம் இல்லை. ஆகவே இதை எல்லோரும் செய்யலாம் என்று நாம் சொல்லமுடியாது. ஆனால், அதேநேரம் நிரூபிக்கப்பட்ட மற்றொரு உண்மையை நாம் மறக்கமுடியாது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே சிறந்த பிணைப்பு ஏற்படும். ஆகவே தாய்ப்பால் கொடுப்பது, உடல்ரீதியாகவும் உணர்வுரீதியாகவும் தாய்க்கும் குழந்தைக்கும் மிக மிக நல்லது.

நீங்கள் கேட்பதுபோல இதை (Tandem Nursing-ஐ) யாரெல்லாம் செய்யலாம் என்றால், எந்த அம்மாக்களுக்கெல்லாம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் இப்படி தாய்ப்பால் கொடுப்பது மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறதோ, அவர்கள் மட்டும் அப்படி செய்தால் போதுமானது” என்றார்.

மற்றவர்கள் உடலை வருத்திக்கொள்ள வேண்டும். அம்மாவின் மகிழ்ச்சிதான், குழந்தையின் மகிழ்ச்சியும். ஆகவே, நீங்கள் (அம்மா) உங்களை கவனித்துக்கொள்ளுங்கள்! அதுவே உங்கள் குழந்தைகளை காக்கும்.

மருத்துவர் பூங்கொடி பாலா

இதையொட்டியே ஸ்ருதி தன்னுடைய பதிவிலும் சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதன்படி அவர், “அம்மாக்களே… ஒரேயொரு விஷயத்தை மட்டும் கண்டிப்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன். நான் இப்படி தாய்ப்பால் கொடுப்பதென்பது, முழுக்க முழுக்க என்னுடைய சொந்த விருப்பத்தில் மட்டுமே நான் செய்யும் விஷயம்

நான் செய்கிறேன் என்பதால், நீங்களும் இதை செய்ய வேண்டும் என்பது இல்லை. எனக்கும்கூட பல நேரம் இப்படி தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடலாமென தோன்றியுள்ளது.
- ஸ்ருதி
Breastfeeding
BreastfeedingFreepik

அதேபோல பல நாட்கள் நெகிழ்ந்துபோய் அழுதும் இருக்கிறேன். குறிப்பாக அகிராவும் அமோரும் (நகுல் – ஸ்ருதி தம்பதியின் குழந்தைகள்) அழும்போதும், அவர்களுக்கு பல் முளைத்தபோதும், உடல்நிலை சரியில்லாமல் போகும்போதும் எனக்கு ரொம்ப சிரமமாக இருக்கும். அதிலும் அதுபோன்ற நேரத்தில் எனக்கும் உடல்நலன் சரியில்லாமல் போய்விட்டால் இன்னும் சிரமம்…!

அப்படியான நேரங்களில், நானும் குறை சொல்லியிருக்கிறேன், அழுதிருக்கிறேன், பிரேக் எடுத்திருக்கிறேன்…! அப்படியெல்லாம் செய்ததால்தான் என்னால் முன்னோக்கி அடுத்தடுத்து செல்ல முடிந்தது. ஆக நான் சொல்ல வருவது என்னவெனில், உங்களை நீங்கள் எப்போதுமே மன அழுத்தத்துக்கு உள்ளாக்கி கொள்ளாதீர்கள்” என்றுள்ளார்.

குறிப்பாக சமூக வலைதளத்தில் யாரோ ஒருவர் செய்கிறார் என்பதற்காக, அதை நீங்களும் செய்ய வேண்டும் என்றில்லை. உங்களுக்கு என்ன முடிகிறதோ, அதை மட்டும் நீங்கள் செய்யுங்கள்

ஸ்ருதி

ஆம், அம்மாக்களே… உங்க ஹெல்த்தான் ஃபர்ஸ்ட்! மத்ததெல்லாம் நெக்ஸ்ட்தான்!

Happy Breastfeeding Ladies!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com