‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல்... தமிழகத்தில் அதிகரிக்கும் ஆபத்து! மருத்துவர் சொல்வதென்ன?
தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுக்குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ 'ஓரியன்டியா சுட்சுகாமுஷி' என்ற ஒட்டுண்ணியால், ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் பாதிப்பு ஏற்படும். இந்த நோய் பாதிக்கப்பட்டால் காய்ச்சல், உடல் வலி, தலை வலி குறிப்பாக கருப்பு காயங்கள் உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும்.
தமிழகத்தில் தெற்கு மாவட்டங்களில் இதுபோன்ற நோய்கள் பரவுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் இந்த நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக விவசாய தொழிலில் ஈடுபடும் நபர்கள், புதர் பகுதிகள் நிறைந்த இடத்தில் வசிக்கும் நபர்கள், காடுகளில் சுற்றுபவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் பாதிக்கப்பட்ட நபர் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே 5 நாட்களுக்கு மேல் அவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் ஐஜிஎம் ஆன்ட்டிபாடி, எலிசா உள்ளிட்ட பரிசோதனைகள் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும். சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த நோய் பற்றியான விழிப்புணர்வை அதிக அளவில் மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும்.
ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்கு, 'அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின்' போன்ற ஆன்டி பயாடிக் மருந்துகள் அளித்து, சிகிச்சை அளிக்க வேண்டும். பின், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்து பாதிப்புகள் ஏற்பட்டால், ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி, உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்க்ரப் டைபஸ்
2021 ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஸ்க்ரப் டைபஸ் என்ற மர்மக் காய்ச்சல் பரவியது. இதன்மூலம், ஸ்க்ரப் டைபஸ் என்று இந்த வைரஸுக்கு பெயரிடப்பட்டது.
ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்றுள்ள லார்வா பூச்சிகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுவதாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் தாக்கும் இந்த பாக்டீரியா பாதிப்பு உள்ளாக்கி வருகிறது.
காய்ச்சல், தலைவலி, உடல் வலிகள், சில நேரங்களில் சொறி போன்றவையே இந்த நோயின் அறிகுறியாகும். நோய் தாக்கம் தீவிரமான நிலையை எட்டியிருந்தால் நிமோனிடிஸ், மூளைக்காய்ச்சல், மனநிலை குழப்பம் அல்லது கோமா, இதய செயலிழப்பு ஆகியவை ஏற்படலாம்.