”கொஞ்சம் கடினம்தான்; மருத்துவ மாணவர்கள் நேரம் பார்க்காமல் பணியாற்ற வேண்டும்” - மருத்துவர் வசந்தா
பணிச்சுமை அதிகரித்து வருவதாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் வசந்தாவுடன், செய்தியாளர் சுரேஷ்குமார் நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்.
டாக்டர் வசந்தா - முன்னாள் இயக்குநர், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை சென்னை.
“பெரிய மருத்துவமனைகளில் 36 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டி இருக்கும். தொடர்ந்து பணியாற்றினால் உடல்நலம் பாதிக்கக்கூடும், அது உண்மைதான். உடல் சோர்வு ஏற்பட்டால் பரிசோதனையில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. ஓய்வு எடுப்பதற்கு ஏற்றவாறு பணிகள் பிரித்து வழங்கப்பட வேண்டும். பணிநேரத்தை 8 மணி நேரமாக குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சில அறுவை சிகிச்சைகள் 15 மணி நேரம் வரை நடைபெறும். பாதியில் சென்றுவிட்டால் அறுவை சிகிச்சை முறையை முழுமையாக கற்க முடியாது. மருத்துவப் படிப்பு மிகவும் கடினமான படிப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை அறிந்துதான் மாணவர்களும் இதை படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். சிறந்த மருத்துவராக வேண்டும் என்றால் நேரம் பார்க்காமல் பணியாற்ற வேண்டும்” என்கிறார்.