தொடர் ஸ்டீராய்டு பயன்பாடு.. பார்வையிழப்பு ஆபத்து.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!
ஸ்டீராய்டு மருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்துவதால் பார்வையிழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்க்கலாம்.
இந்தியாவில் மருத்துவரின் ஆலோசனையின்றி பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகள் (Steroids), Secondary Glaucoma எனப்படும் 'இரண்டாம் நிலை கண்அழுத்த நோய்' வருவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜனவரி மாதம் Glacuoma விழிப்புணர்வு மாதமாக' கடைப்பிடிக்கப்படும் நிலையில், இதுகுறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வாமை, தோல் வியாதிகள் மற்றும் சுவாசப் பிரச்னைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டுகள், நீண்டகாலத்திற்குப் பயன்படுத்தப்படும்போது கண்ணின் உள் அழுத்தம் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கண்சொட்டு மருந்துகள், மாத்திரைகள், இன்ஹேலர்கள் அல்லது களிம்புகள் என எந்த வடிவில் ஸ்டீராய்டை ப்பயன்படுத்தினாலும் இந்த ஆபத்து உண்டு என்று எச்சரிக்கின்றனர்.
வேறு ஒரு மருத்துவப் பிரச்னைக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவாகவோ அல்லது வேறு ஒரு நோயின் தொடர்ச்சியாகவோ ஏற்படுவதே இரண்டாம் நிலை கண் அழுத்த நோய் எனப்படுகிறது. இதைக் கவனிக்காமல் விட்டால் பார்வை நரம்பை நிரந்தரமாகச் சேதப்படுத்தி, மீளமுடியாத பார்வையிழப்பை உண்டாக்கும். இந்தியாவில் 1.2 முதல் 1.3 கோடி மக்கள் கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயின் ஆரம்பக்கட்டத்தில் வலி இருக்காது; மையப்பார்வை நன்றாகவே இருக்கும். இதனால் நோயாளிகள் தங்களுக்குப் பாதிப்பு இல்லை என்று தவறாக எண்ணுகின்றனர். ஆனால், பார்வை நரம்புகள் அமைதியாகச் சேதமடைந்துகொண்டே இருக்கும். அறிகுறிகள் தெரியவரும்போது, பாதிப்பு முற்றிய நிலையை அடைந்திருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம், தைராய்டு பிரச்னை மற்றும் கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. முறையான மருத்துவர் பரிந்துரை இன்றி ஸ்டீராய்டுகளை பயன்படுத்தக் கூடாது. நீண்டநாட்களாக ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள்,கட்டாயம் முறையான கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இரண்டாம் நிலை கண் அழுத்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மட்டுமே பார்வையிழப்பைத் தடுக்க முடியு ம்என்று அவர்கள் கூறுகின்றனர்.

