நீரிழிவு நோயால் கண் பாதிப்பு வருமா? - நீரிழிவு ரெட்டினோபதி பற்றிய முக்கிய தகவல்கள்!
நீரிழிவு ரெட்டினோபதி :
நீரிழிவு ரெட்டினோபதி என்பது நீரிழிவு நோயின் காரணமாக ஏற்படும் ஒரு வகையான கண் நோயாகும். இது நீரிழிவு நோயின் நீண்டகால விளைவுகளால் ஏற்படும் மைக்ரோவாஸ்குலர் கோளாரு என்று கூறலாம். இந்த நோயானது விழித்திரைக்கு ஆபத்தை ஏற்படுத்தி இறுதியில் குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்க காரணமாக அமைகிறது. இந்த வகையான நோயை முன்கூட்டியே அறிந்து அதனை தடுப்பதற்கான செயல்களை செய்யும் போது இதன் தீவிர பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ளலாம்.
யாரை அதிகம் பாதிக்கிறது:
இவ்வகையான பாதிப்பானது சர்க்கரை நோய் அதிகம் உள்ளவர்களை அதிகமாக பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் ஏற்படும் உயர் ரத்த சர்க்கரை அளவானது விழித்திரையில் உள்ள இரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது. இதனால் இரத்த நாளங்களில் வீக்கம், கண்களில் ரத்தம் ஓட்டம் கடந்து செல்வதில் பாதிப்பு ஏற்படும். அது மட்டுமல்லாது புதிய இரத்த நாளங்கள் விழித்திரையில் வளர்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
இது குறித்த கூடுதல் தகவல்கள் கண் மருத்துவர் திருமதி ரஜினி காந்தா அவர்களிடமிருந்து பெறப்பட்டது.
நீரிழிவு ரெட்டினோபதி :
நீரிழிவு ரெட்டினோபதி என்பது நீண்ட கால நீரிழிவு நோயால் கண் விழித்திரையில் ஏற்படும் ஒருவகையான பாதிப்பாகும். இது மரபணு காரணங்களாலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
2 வகையான நீரிழிவு ரெட்டினோபதி
முன் பெருக்க நீரிழிவு ரெட்டினோபதி (pre proliferative)
இது நீரிழிவு கண் நோயின் ஆரம்ப நிலையாகும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு இது ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதில் கண்களில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் கசிந்து, வீக்கம் ஏற்பட்டு இதனால் விழியில் உள்ள மக்குலா வீங்கும் போது இவ்வகையான பாதிப்பானது உருவாகின்றது. இதற்கு மாக்குலர் எடிமா என்று பெயர்.
(மாக்குலா என்பது விழித்திரையின் மையத்தில் உள்ள ஒரு சிறிய முக்கியமான பகுதி. நம் முகங்கள், எழுத்துகள் போன்றவற்றையும், உங்கள் எதிரில் உள்ள பொருட்களின் விவரங்களையும் தெளிவாகப் பார்க்க இதன் உதவி நிச்சயம் தேவை.)
பெருக்க நீரிழிவு ரெட்டினோபதி ( proliferative)
இந்தவகையான பாதிப்பானது நீரிழிவு கண் நோயின் மிகவும் மேம்படுத்தப்பட்ட அதாவது முற்றிய நிலை என்று கூறலாம். இத்தகைய பாதிப்பானது புதிய இரத்த நாளங்கள் வளர தொடங்கும்போது உண்டாகிறது.இது நியோவாஸ்குலரைசேஷன் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்பானது விழியின் மைய மற்றும் புற பார்வைத்திறனை பாதிக்கும் வண்ணம் அமைகிறது.
கண்டறியும் முறைகள்:
1. ஃபண்டஸ் பரிசோதனை Fundus examination
2. ஃபண்டஸ் ஃப்ளோரசெசின் ஆஞ்சியோகிராபி Fundus Fluorescein angiography( FFA)
3. ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி Optcal coherence tomography (OCT)
எவ்வாறு சரிசெய்யலாம்:
1. ரெட்டினல் லேசர்..... பான் ரெட்டினல்/ மற்றும் அல்லது ஃபோகல் லேசர் சிகிச்சை.
2. இன்ட்ரா விட்ரியல் எதிர்ப்பு VEGF ஊசிகளை பயன்படுத்தி நீரிழிவு மாகுலர் எடிமாவுக்கு சிகிச்சையானது செய்யப்படுகின்றது.
3. விட்ரக்டோமி என்பது ஒரு வகையான அறுவை சிகிச்சை முறையாகும். இது கடுமையான இரத்தக்கசிவு ஏற்படும் நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.
4. குறிப்பிட்ட கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்தி மாகுலர் எடிமா போன்ற கண் நோய்க்கு சிகிச்சை அளிக்கலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள சிகிச்சை முறை அனைத்தும் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கப்பட்டு சரியாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.