"வேப்பிலை சாறுக்கு கொரோனா வைரஸை அழிக்கும் திறன்"- ஆய்வில் தகவல்
கொரோனா வைரஸை அழிக்கும் திறன் வேப்ப மரத்தின் சாறுக்கு உள்ளது என்று ஒரு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
வேப்ப மரத்தின் பட்டை, இலைகள், விதைகள், வேர்கள், பூக்கள் மற்றும் பழங்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் மிக்கவை. இதன் இலைகளில் மட்டும் 120-க்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள் உள்ளன. பழங்காலத்தில் இருந்தே இதன் சாறு வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலையில், கொரோனா வைரஸை அழிக்கும் திறன் வேப்ப மரத்தின் சாறுக்கு உள்ளது என்று ஒரு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் (IISER) ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், வேப்ப மர பட்டை சாறினை விலங்குகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில், அதில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு சக்தி இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், வேப்பமர பட்டை சாறினை மனிதர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வேப்ப மரப்பட்டை சாறு கொரோனா வைரஸ் நுழைவை தடுக்கிறது என்றும் நோய் தொற்றுக்கு பிறகும் கூட வைரஸ் நகல் எடுப்பதையும், பரவலையும் குறைக்கிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: இந்திய பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 11% அதிகரிப்பு