மலச்சிக்கல் உயிருக்கே ஆபத்தாகலாம்..செரிமானப் பிரச்சினைகளுக்கு எளிய தீர்வு என்ன.?
மலச்சிக்கல் என்பது சாதாரணமாகக் கருதப்பட்டாலும், அடிவயிற்று வலி, வாந்தி, ரத்தம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மலச்சிக்கல் என்பது பலரும் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு செரிமானப் பிரச்சினையாக இருந்தாலும், சில நேரங்களில் அது உயிருக்கே ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாரத்திற்கு மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிப்பது சாதாரண மலச்சிக்கலாகக் கருதப்பட்டாலும் அடிவயிற்றில் தாங்க முடியாத வலி, தொடர் வாந்தி, வயிறு உப்பசம் மற்றும் மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.
நீண்ட கால மலச்சிக்கலை கவனிக்காமல் விடும்போது, அது குடல் அடைப்பு, மலக்குடல் பிளவு, மூல நோய் மற்றும் மலம் குடலிலேயே தேங்கி இறுகிவிடும் 'ஃபிகல் இம்பாக்ஷன்' போன்ற தீவிரமான பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, மலம் கழிக்க இயலாத நிலை மற்றும் அதனுடன் காய்ச்சல் இருந்தால், அது குடல் துளை விழுந்ததற்கான அல்லது கடுமையான தொற்றின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் அலட்சியம் காட்டக்கூடாது.
போதிய அளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகள், அதிகப்படியான தண்ணீர் மற்றும் முறையான உடற்பயிற்சி மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும். அதேவேளையில் மருந்துக்கடைகளில் தாமாகவே மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்துவது குடலின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும் என்பதால் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவதே பாதுகாப்பானது.

