நமது ஊரை பொருத்தவரை விசேஷம் என்றாலே கறி விருந்துதான். நல்ல காரசாரமான சிக்கன், மட்டன் என அனைத்தும் இலைகளில் இடம்பெற்றிருக்கும். அதிலும் நான்வெஜ் ஞாயிற்றுக்கிழமையா? என்று நம்மில் கேட்பவர்கள் எத்தனைபேர் இருக்கிறோம். தற்போது டெக்னாலஜி வளர வளர உணவுமுறைகளை குறித்த விழிப்புணர்வும் அச்சமும் கூடவே சேர்ந்து வளர்ந்துவருகின்றன. இதனால் பலர் மட்டன் சாப்பிடுவதை தவிர்த்துவருகின்றனர். ஏனெனில் சிலர் இதை ஆரோக்கியமற்றது என கருதுகின்றனர். இதனால் அவர்கள் சிக்கனை தேர்ந்தெடுக்கின்றனர். எனினும், மட்டனை தவிர்ப்பவர்களுக்கு நன்மைகள் இருப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்ஹோத்ரா.
மட்டன் சாப்பிடுவது குறித்தும், சிக்கனுடன் ஒப்பிடுகையில் அதன் சாதக பாதகங்கள் எப்படியிருக்கிறது என்பது குறித்தும் அவர் விளக்கியிருக்கிறார். இந்த உணவுகளைப் பற்றிய புரிதல் நாம் சரியான இறைச்சியைத்தான் சாப்பிடுகிறோமா அல்லது நமது உணவுமுறையை மாற்றியமைக்க வேண்டுமா என்பது குறித்த தெளிவான முடிவை எடுக்க உதவும்.
1. மட்டனில் குறைந்த அளவு கலோரிகள், குறைந்த கொழுப்பு மற்றும் புரதச்சத்து சற்று அதிகமாகவும் இருக்கிறது.
2. மேலும் மட்டனில் அதிக இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியமும், சிக்கனைவிட குறைந்த அளவில் சோடியமும் இருக்கிறது. பலபேர் சிக்கன் சாப்பிடுவது நல்லது என நினைக்கின்றனர். எனினும் சிக்கனில் சில பகுதிகளே உடலுக்கு நல்லது. சில பகுதிகளில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
ஒரு கோழியின் கால்கள், இறக்கைகள் மற்றும் தொடைப்பகுதியில் அதன் உடற்பகுதியைவிட கொழுப்பு அதிகமாக செறிந்திருப்பதாகக் கூறுகிறார் மல்ஹோத்ரா. அதேசமயம் கோழியின் மார்பு பகுதியில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது என்கிறார். எனவே சிக்கன் சாப்பிடும்போது மார்புப்பகுதி சதையை வாங்கி சாப்பிடும்படி அறிவுறுத்துகிறார்.
மீனைத் தவிர கோழியின் மார்பு பகுதியிலும், ஆட்டின் மார்புப்பகுதியிலும் புரதச்சத்து நிறைந்திருப்பதால் அதை உண்பது நல்லது. எனவே மட்டன் சாப்பிடும் பழக்கமுடையவர்கள் அதனை பயந்து ஒதுக்கவேண்டிய அவசியமில்லை என்கிறார் மல்ஹோத்ரா. எனினும், மார்பெலும்பு பகுதியைத் தவிர பிற பகுதிகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவைதான்; எனவே அவற்றை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது என்கிறார் அவர்.
மாமிச உணவுகள் உடலுக்கு அவசியமானது; அதேசமயம் ஆரோக்கியத்திற்கும் நல்லதுதான் என்றாலும், எந்த இறைச்சிவகையை எடுத்துக்கொள்வது, அதில் பிரத்யேகமாக எந்த பகுதியை சாப்பிடுவது நல்லது என்பதை தெரிந்துகொண்டு பிறகு சாப்பிடலாம்.