‘இரண்டு ஆண் எலிகளிலிருந்து கருமுட்டைகள் உருவாக்கம்’ - அசத்திய ஜப்பான் விஞ்ஞானிகள்!

‘இரண்டு ஆண் எலிகளிலிருந்து கருமுட்டைகள் உருவாக்கம்’ - அசத்திய ஜப்பான் விஞ்ஞானிகள்!
‘இரண்டு ஆண் எலிகளிலிருந்து கருமுட்டைகள் உருவாக்கம்’ - அசத்திய ஜப்பான் விஞ்ஞானிகள்!

அனைத்து மனித இனத்தின் இனப்பெருக்கத்திற்கும் ஒரு ஆணின் விந்தணுவும், ஒரு பெண்ணின் கருமுட்டையும் தேவை. ஆனால், தற்போதுள்ள நவீன விஞ்ஞானமானது மேற்கண்ட நிலையை சீர்குலைக்கும் வகையில் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. மார்ச் 8-ம் தேதி லண்டனில் மனித மரபணு எடிட்டிங் தொடர்பாக, மூன்றாவது சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் மனிதர்களின் கருவுறாமை உள்ளிட்ட சில காரணங்களுக்கு சிகிச்சை அளிப்பதன் சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது. அப்போது முதன்முறையாக இரண்டு வயது வந்த ஆண் எலிகளின் டிஎன்ஏவில் இருந்து உருவாக்கப்பட்ட எலிக் குட்டிகள் ஆரோக்கியமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இது முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டில், மூன்று நபர்களின் டிஎன்ஏவில் இருந்து ஒரு குழந்தையை உருவாக்கியதற்குப் பின்னரான, பெரிய இனப்பெருக்க சீர்குலைவு ஆகும். இந்த ஆராய்ச்சியானது தாயிடம் உள்ள ஒரு கோளாறை குழந்தைக்கு வராமல் தடுக்கும் ஒரு முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது. குழந்தையின் அனைத்து அணுக்கரு டிஎன்ஏவும் ஒரு விந்தணு மற்றும் ஒரு முட்டையிலிருந்தே வந்தது. இருப்பினும் குழந்தை மூன்றாவது நன்கொடையாளரின் சொந்த டிஎன்ஏவையும் பெற்றிருந்தது.

கடந்த 2004-ம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இரண்டு பெண் எலிகளின் முட்டைகளைப் பயன்படுத்தி கருக்களை உருவாக்க முடிந்தது என அறிவித்தனர். அந்த கருவில் இருந்து ஒரு ஆரோக்கியமான குட்டி உருவானது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு, கடந்த 2018-ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த ஒரு குழு இரண்டு ஆண் எலிகளின் டிஎன்ஏவைப் பயன்படுத்தி உயிருள்ள குட்டிகளை உருவாக்கியது. அந்த எலிகள் பிறந்த சில நாட்களிலேயே உயிரிழந்தன.

ஆனால், தற்போது ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இரண்டு ஆண் எலிகளின் செல்களில் இருந்து உருவாக்கியுள்ள குட்டிகள் முதிர்வயது வரை உயிர் பிழைத்துள்ளன. அத்துடன் அவை தாங்களாகவே பெற்றோராகவும் மாற முடிந்துள்ளது. அதன்படி, ஆண் எலிகளிலிருந்து எடுக்கப்பட்ட தோல் செல்கள், தூண்டப்பட்ட ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் செல்களாக மாற்றப்பட்டுள்ளன. ஒரு விரிவான செயல்முறை மூலம், செல்களில் உள்ள XY பாலின குரோமோசோம்கள், XX குரோமோசோம்களாக மாற்றப்பட்டன.

இந்த செல்கள் தன்னிச்சையாக Y குரோமோசோம்களை இழக்கும்படி செய்யப்பட்டன. (மனிதர்களைப் போலவே, ஆண் எலிகளின் உயிரணுக்களும் பொதுவாக ஒரு X மற்றும் ஒரு Y குரோமோசோமைக் கொண்டிருக்கின்றன.) பின்னர் செல்களுடன் இணைக்கப்பட்ட ரிவர்சைன் எனப்படும் சேர்மமமானது, செல் பிரிவின்போது குரோமோசோம்கள் விநியோகத்தின் பிழைகளை சரிசெய்துள்ளது.

பின்னர் எலியின் விந்தணுவைப் பயன்படுத்தி கருத்தரிக்கப்பட்ட முட்டைகள், ஒரு பெண் எலியின் கருப்பைக்குள் மாற்றப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட 630 கருக்களில் இருந்து, ஏழு எலி குட்டிகள் மட்டுமே பிறந்தன. இருப்பினும் அவை சாதரணமாக வளர்ந்து, தாங்களாகவே பெற்றோராகவும் மாற முடிந்துள்ளது. இது குறித்து முன்னணி ஆராய்ச்சியாளர் கட்சுஹிகோ ஹயாஷி பேசுகையில், “இந்த ஆராய்ச்சியின் மிகப்பெரிய தந்திரம், எக்ஸ் (X) குரோமோசோமின் நகலைப் பயன்படுத்தியதே ஆகும். ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்ட எலிகளானது , வழக்கமாக வளர்க்கப்படும் எலிகளிலிருந்து வேறுபட்டவை என்பதைக் கண்டறிய கவனமாக ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி குழு, ஏற்கனவே கரு முட்டைகளை உருவாக்க ஆண் மனிதர்களின் தோல் செல்களைப் பயன்படுத்த முயற்சித்து வருகிறது. ஒருவேளை இந்த ஆராய்ச்சி மனிதர்களிடையே வெற்றி பெற்று இனப்பெருக்கம் செய்ய முடிந்தாலும், கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். இது தொழில்நுட்பத்தின் அடிப்படையில், 10 ஆண்டுகளில் கூட மனிதர்களிடையே சாத்தியமாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மாதத்தில் மூன்று குழந்தைகள் தங்கள் தாய்மார்களின் மைட்டோகாண்ட்ரியல் கோளாறுகளைப் பெற முடியும் என்பதற்கான சான்றுகள் வெளிவந்துள்ளன. இது மாற்றுக் கோணத்தில் இனப்பெருக்கத்தை அணுகும்போது, நாம் நினைப்பது எப்படி நடக்கிறது என்பதை விளக்குகிறது” என்றார். இந்த ஆராய்ச்சி மனிதர்களிடையே சாத்தியமாகும் பட்சத்தில், தன்பாலின ஜோடிகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும் என கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com