காற்று மாசுபாட்டால் ஞாபக மறதி அபாயம் - WHO எச்சரிக்கை
மாசுபட்ட காற்றை சுவாசிப்பது நுரையீரலை மட்டுமல்ல, மனித மூளையையும் கடுமையாகப் பாதித்து 'டிமென்ஷியா' எனப்படும் ஞாபக மறதி நோயை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் முதன்முறையாக அதிகாரபூர்வமாக எச்சரித்துள்ளது. டிமென்ஷியா நோயை உருவாக்கும் 14 முக்கிய ஆபத்துக் காரணிகளின் பட்டியலில் காற்று மாசுபாட்டை உலக சுகாதார நிறுவனம் தற்போது புதிதாகச் சேர்த்துள்ளது.
நீண்ட காலம் அசுத்தமான காற்றை சுவாசிப்பது மூளையின் செயல்பாட்டைக் குறைத்து, நினைவாற்றல் இழப்பைத் தீவிரப்படுத்தும் என்று மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்தியாவில் வெளிப்புற காற்று மாசு மட்டுமின்றி, வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசும் முதியவர்களிடம் இந்நோய் பரவ முக்கியக் காரணமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயுடன் காற்று மாசுபாட்டையும் கட்டுப்படுத்துவதன் மூலம் 45 சதவீதம் ஞாபக மறதி நோய் பாதிப்புகளைத் தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், சுற்றுச்சூழல் தூய்மையைப் பராமரிப்பது மூளை ஆரோக்கியத்திற்கு மிக அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

