இணையத்தில் ஆபாசத்தைத் தேடி பணத்தை இழக்கிறார்களா இளைஞர்கள்..?

இணையத்தில் ஆபாசத்தைத் தேடி பணத்தை இழக்கிறார்களா இளைஞர்கள்..?
இணையத்தில் ஆபாசத்தைத் தேடி பணத்தை இழக்கிறார்களா இளைஞர்கள்..?

தொழில்நுட்பம் வளரவளர செல்போன்களில் கையடக்கமாக நல்லதும் கெட்டதும் உலா வருகின்றன. ஆனால் இப்போதுள்ள இளைஞர்களோ கெட்டதையே அதிகம் தேர்ந்தெடுப்பதாக தெரிகிறது. ஏனென்றால் இளைஞர்களை வைத்தே இந்த மோசடி நடைபெறுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் கூறுகின்றன. செல்போன்களில் ஆபாச ஆப்கள் எக்கச்சக்கமாக உள்ளன. அதில் ஏராளமான இளைஞர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவது போல ஏகப்பட்ட ஆப்களுக்கு அடிமையாக இருக்கின்றனர். அடிமையாக இருப்பது மட்டுமல்ல பணத்தையும் இழந்து வருகின்றனர். இதில் 1000 முதல் லட்சக்கணக்கில் மோசடி நடைபெறுகிறது.

உதாரணத்திற்கு, சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் உதயராஜ். இவருக்கு இணையதளம் மூலம் ப்ரியா என்ற பெண் அறிமுகமாகியிருக்கிறார். இந்நிலையில் ப்ரியா உதயராஜிடம், ஆபாசமாக உரையாட 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் வீடியோ காலில் பேச ரூ. 1000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதற்கு உதயராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் பிரியாவிடம் இருந்து உதயராஜூக்கு பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து பிரியாவிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக காவல்துறையினரிடம் உதயராஜ் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், உதயராஜிடம் தொலைபேசியில் பெண் குரலில் பேசியவர் நெல்லை மாவட்டம் பணகுடியைச் ராஜ்குமார் ரீகன் என்பது தெரியவந்தது.

பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 1000-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் பெண்குரலில் பேசி பணம் பறித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தொலைபேசியில் பேசுதல், ஆபாச படங்களை பகிர்தல், மிரட்டுதல் ஆகியவற்றின் மூலம் கிடைத்த பணத்தில் வீடு, கார் உள்ளிட்டவைகளை வாங்கியிருப்பதாகவும் பெண்போல் பேசி பணம் பறிப்பதை சென்னையில் ‌தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது இரு பெண்கள் மூலம் கற்றுக்கொண்டதாகவும் உதயராஜ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமே தெரியாத நேரில் பார்க்காத பெண்ணிடம் ஆபாசமாக பேசுவதற்கு பணம் கொடுப்பது மனிதனின் வக்கிரத்தையே காட்டுகிறது என்றாலும் இதனை வைத்து மோசடியில் ஈடுபடும் கும்பலும் இருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவில் ஆபாச இணையதளங்களுக்கு கடந்தாண்டு மத்திய அரசு தடை விதித்தது. இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டினர். ஆனால், இணையதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை "ஆப்"களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. ஆம், ஆபாசங்கள் நமது செல்போன்களுக்கே நேரடியாக வந்துவிடுகிறது. பெரும்பாலும் இதுபோன்ற செயலிகள் நடிகைகளும், மாடல்களும் நடத்துகின்றனர். அண்மையில் கூட தமிழில் "தாஜ்மஹால்" படத்தில் அறிமுகமான நடிகை ரியா சென் கூட இதுபோன்ற ஒரு ஆப்பை தொடங்கியுள்ளார்.

இதுபோன்ற ஆப்களை முதலில் அறிமுகப்படுத்தியவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. பாலிவுட்டில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்த இவர், பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தியவர். இவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கின்றனர். இதன் காரணமாக "பூனம் பாண்டே ஆப்" என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இதனால் நல்ல வருமானமும் வந்தது. இதற்கு அடுத்தகட்டமாக தன்னுடைய ஆபாச வீடியோவைவும் வெளியிட்டார்.

ஆனால், இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பதற்கு செயலியை பதிவிறக்கம் செய்தவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். ஏறக்குறைய ஆபாச வீடியோவை பார்க்க ரூ.1000 செலுத்த வேண்டும். ஏறக்குறைய 10 லட்சம் பேர் பூனம் பாண்டேவின் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனால் ஆபாசங்களின் உச்சகட்டமாக சென்றுக்கொண்டு இருக்கிறார் பூனம் பாண்டே. இவர் தொடங்கி வைத்த புள்ளிதான், இப்போது ஏராளமான மாடல்களும், நடிகைகளும் தங்கள் பெயர்களில் செயலிகளை உருவாக்கி ஆபாச வீடியோக்களை பதிவிட்டு அதன்மூலம் வருமானம் பெற்று வருகின்றனர்.

இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது "பெண்களை போன்று பேசி மோசடி செய்த வழக்கில் ஒருவரை கைது செய்தோம். ஏனென்றால் எங்களுக்கு புகார் வந்தது. அதன்பேரில் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் இதுபோன்ற ஆப்கள் மூலமாக பணத்தை இழப்பது என்பது நாமே தேடிச் சென்று பணத்தை இழக்கிறோம். அது மனிதனின் வக்கிர புத்தியும் சபலமுமே காரணம். இதற்கெல்லாம் புகார்கள் வருவதில்லை. இதுபோன்ற விஷயங்களுக்கு தனிமனித ஒழுக்கம் மிகவும் தேவைப்படுகிறது. அதனை நாம் கடைப்பிடித்தாலே இதுபோன்ற மோசடி கும்பல்களில் இருந்து தப்பிக்கலாம்" என்கிறார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com