ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?

ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?

2019 - 2020 ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால  நிதிநிலை அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தாண்டு  நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கான நிதி அறிவிப்பும் வெளியாகும். அதில் தமிழக தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2018 - 2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு ரூபாய் 2,548 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் 2017 - 2018 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கான ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு ரூ.2,287 கோடி நிதி ஒதுக்கியது. 

இதில் நாகப்பட்டினம் ரயில் நிலையத்தை மேம்படுத்துவது. மேலும், சென்னை, மதுரை, கோவை, திருவனந்தபுரம் வரையிலான மின்மயமாக்கும் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்தாண்டு புதிய திட்டங்கள் ஏதும் இல்லை என்றாலும் மதுரை - வாஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி - நாகர்கோவில் இடையிலான வழித்தடத்தை மின்மயமாக்குவதை பிரதானமாக கொண்டது. தெற்கு ரயில்வேக்கு ஒட்டுமொத்தமாக இதுவரை இல்லாத வரையில் ரூபாய் 7426 கோடியை அறிவித்தது.

ஒரு பிளாஷ்பேக்

2016 - 2017 ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ.2152 கோடி ஒதுக்கியது. இதில்  சென்னை - தில்லி சரக்கு ரயில் பாதை, நாகை - வேளாங்கண்ணி ரயில் நிலைய மேம்பாடு, சென்னையில் ரயில் வாகன நிலையம் ஆகியவைக்கு நிதி ஒதுக்கப்பட்டன. மேலும் புதிய ரயில் பாதைக்கு ரூ.75.37 கோடி, அகல ரயில் பாதைக்கு ரூ.344 கோடி, இரட்டை ரயில் பாதைக்கு ரூ.530 கோடி, இதுபோன்று பல பணிகளுக்கென ரூ.2157 கோடி மத்திய அரசு அறிவித்ததது. இதில் செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்தது. நிலையிலுள்ளது. அவ்வழியில் புதிய ரயில்களை இயக்கவும் ரயில்வே நிற்வாகம் முயற்சிக்கிறது. இந்நிலையில் விழுப்புரம்- செங்கல்பட்டு- திருச்சி - மதுரை இரட்டை ரயில் பாதை விரைவாக முடிவடையும் நிலையிலுள்ளது.

எதிர்பார்ப்பு என்ன ? 

தென்மாவட்ட மக்களின் முக்கிய எதிர்பார்பான மதுரை - நாகர்கோயில் - வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி - நாகர்கோவில் திருவனந்தபுரம் போன்ற இரட்டை ரயில் பாதைக்கு ரூ.540 கோடி ஒதுக்கியதாக செய்தி வந்தது. ஆனால் இந்த ரயில் தடங்களில் எந்த பணியும் தொடங்கப்படவில்லை. இது தென் தமிழக மக்களுக்கு பெறும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
2014 - 2015 ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜட்டில் கன்னியாகுமரியில் அதி நவீன ரயில் முனையம் அமைக்கவேண்டும் என்கிற அறிவிப்பு வெளியானது. ஆனால் அறிவிப்போடு மட்டுமே இருக்கிறது. இதனை செயல்படுத்தப்பட்டிருந்தால் கிடப்பில் போடப்பட்ட கிழக்கு கடற்கறை ரயில் பாதை செயல்பாட்டிற்கு வரும். 

திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டினம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம், காரைக்குடி, சென்னை வரை அநேக ரயில் நிலயங்கள் உருவாகும். மேலும் மத்திய அரசு உருவாக்கி வரும் குளச்சல் துறைமுகத்திற்கும், தூத்துக்குடி துறை முகத்திற்கும் நேரடி தொடர்பு ஏற்படும். சென்னையை போல தென் தமிழகத்தில் சிறப்பான தொழிற்சாலைகள் உருவாகும். ஆகவே குமரி ரயில் முனையத்திற்கு தேவையான நிதியை இந்நிதியாண்டில் ஒதிக்கி பணியை தொடங்கவேண்டும். இதனால் சுற்றுலா துறை வளர்ச்சி பெரும். அந்நிய முதலீடும் பெருகும். 

தமிழகத்தின் முக்கிய இருவழிபாதைகளான மதுரை - நாகர்கோயில், வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி, நாகர்கோயில் - திருவனந்தபுரம் போன்ற பணிகளை கிடப்பில் போடாமல் வரும் நிதியாண்டில் முடிக்கவேண்டும் உள்ளிட்டவை கோரிக்கைகாளாக உள்ளன. தென் தமிழகத்துக்கு போதிய அளவிலான ரயில்கள் இயக்கப்படுவதில்லை என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 

இது குறித்து தென் மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சூசை ராஜ் கூறியது "தென் தமிழகத்திற்கு தேவையான ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அலட்சியம் காட்டியதால் ஆயிரக்கணக்கான தனியார் பேருந்துகள் இயங்கவும், அதிக கட்டணம் வசூலிப்பதும், அதிக சாலை விபத்துக்கள் ஏற்படுவதும் தொடர்கிறது.  இதனால் நகருக்குல் நெரிசலும் ஏற்படுகிறது. கல்வி, வேலை, வியாபாரம், சுற்றுலா சம்பந்தமாக சென்னை வந்துசெல்லும் தென் தமிழக மக்களுக்காக வாரம் ஒருமுறை வியாழன் வாராந்திர ரயிலான எழும்பூரில் இருந்து நாகர்கோயில் செல்லும் அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும்."

"உடனடியாக குறைந்தபட்சம் மூன்று முறையாவது (வியாழன், வெள்ளி, சனி) சென்னையில் இருந்தும் தொடர்ந்து நாகர்கோவிலில் இருந்தும் இயக்கவேண்டும். நாகப்பட்டினம், வேளாங்கன்னி, தஞ்சாவூர் போன்ற முக்கிய சுற்றுலா தலங்களில் இருந்து நெல்லை, நாகர்கோவில், குமரி, திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்கு நேரடியாக ரயில் சேவை இல்லாததால் தமிழக மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஆகவே குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது திருவனந்தபுரம். கொச்சுவேலியிருந்தோ நாகர்கோவில்லிருந்தோ நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக வேளாங்கன்னிக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும் என்கிறார் சூசை ராஜ். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com