காட்டுக்கு போகவும் விலங்குகளை பார்க்கவும் விருப்பமா? நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!

காட்டுக்கு போகவும் விலங்குகளை பார்க்கவும் விருப்பமா? நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!
காட்டுக்கு போகவும் விலங்குகளை பார்க்கவும் விருப்பமா? நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!

சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் பலருக்கும் ஓய்வு கிடைக்கும்போதெ்லாம், ஒரு டிராவல் செல்ல வேண்டும் என்ற ஆசை எழும். அதுவும் காடுகளுக்கு விசிட் அடிக்க விரும்புவார்கள். எவ்வளவு நாள்தான் உயிரியல் பூங்காவிலேயே கூண்டில் இருக்கும் மிருகங்களை பார்ப்பது. ஒரு மாற்றத்துக்கும் விலங்குகளை அவை இருக்கும் இடத்திலேயே சென்று பார்ப்பது ஒரு த்ரில்லான அனுபவம் அல்லவா. அதனால்தான் பலரும் காடுகளை நோக்கி பயனப்படுகிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் கண்டு ரசிக்க கால நேரம் உண்டு. வருடம் முழுவதும் விலங்குகளை காடுகளில் பார்க்கலாம் என நினைத்தால் அது இயலாத காரியம். அவற்றை அதிகமான அளவில் காணக்கூடிய மாதங்கள் என இருக்கிறது. அதை தெரிந்துக்கொண்டால் நாம் திட்டமிட்டு காடுகளுக்கு பயனப்படலாம் என்ற ஒர் எண்ணமும் இருக்கிறது. வாருங்கள் இது குறித்து நாம் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

இது குறித்து கோவை மாவட்டம் ஓசை அமைப்பின் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ஓசை காளிதாசன் பேசும்போது "எல்லா விலங்குகளையும் நாம் எப்போதும் காடுகளில் பார்க்க முடியாது. உதாரணத்துக்கு தமிழகத்தின் முதுமலை மற்றும் மசினக்குடியில் மான்கள், காட்டு மாடுகள், மயில்கள், காட்டு முயல்கள், காட்டு பன்றிகளை நாம் எப்போதும் பார்க்க முடியும். ஆனால் யானைகளை நாம் எப்போதும் பார்க்க முடியாது. ஏனென்றால் யானைகளுக்கு தண்ணீர் தேவை என்பதால் அவை வலசை சென்றுக்கொண்டே இருக்கும். முதுமலை போன்ற சரணாலயங்களில் கோடை காலங்களில் யானைகளை பார்க்க முடியாது. அவை வேறொரு காடை நோக்கி பயனப்பட்டு இருக்கும். ஆனால் பருவ மழை பொழிந்ததும் மீண்டும் நீர்நிலைகளை தேடி வரும். பொதுவாக யானைகளை ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகளவில் காடுகளில் காணலாம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் "அனைவரும் காடுகளில் பார்க்க விரும்பும் விலங்கு புலி. ஆனால் புலியை காண்பது நம் அதிர்ஷ்டத்தை பொறுத்தது. 50 முறை காடுகளுக்கு பயனப்பட்டவர்கள் புலியை ஒரு முறை கூட காணாமல் திரும்பியிருக்கிறார்கள். ஆனால் முதல்முறை காட்டுக்கு பயனப்பட்டவர்கள் புலியை பார்த்து இருக்கிறார்கள். வட இந்தியாவில் சமவெளி காடுகள் இருக்கின்றன. அதனால் புலியை சற்று எளிதாக காணலாம். ஆனால் இங்கு அப்படி இல்லை. புதர்கள் நிரம்பி இருக்கும் காடுகள் நம்முடையது. அதனால் இங்கு புலியை பார்ப்பது அவ்வளவு எளிதானல்ல. இதேபோல கர்நாடகாவின் கபினி வனப்பகுதியில் கூட புலியை காணலாம், இங்கு அவ்வளவு எளிதல்ல. எப்போது புலியை சாலையை கடக்கும் என நமக்கு தெரியாது. அதனால் புலி, சிறுத்தையை காண்பது ஓர் Pure Luck" என்கிறார் ஓசை காளிதாசன்.

இப்போது தமிழகத்தில் இருக்கும் சரணாலயங்கள் குறித்து பார்க்கலாம்

தமிழகம் இயற்கை சூழியலை அற்புதமாக கொண்டிருக்கும் மாநிலம் என்றால் அது மிகையாகாது. சங்கக் காலத்திலிருந்தே வாழ்விடங்களை தனித்தனியே வகைப்படுத்தியிருந்தார்கள் தமிழர்கள். தமிழகத்தின் இயற்கைச் செல்வத்தின் முக்கியப் பரிமாணம் இங்குள்ள பல வகையான சூழல் தொகுப்புகள்தான். இதனாலேயே தமிழகம் பல வகையான வாழிடங்களையும், கானுயிர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது பலருக்கும் தெரியாத விஷயம்.

பண்டைய தமிழர் தமிழகத்தின் சூழல் தொகுப்பினை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்து வகையாக பிரித்திருந்தனர். காடும் காடு சார்ந்த நிலப்பகுதி முல்லை எனவும், மலையும் மலையைச் சார்ந்த பகுதி குறிஞ்சி எனவும், வயலும் வயலைச் சார்ந்த பகுதி மருதம் எனவும், கடலும் கடலைச் சார்ந்த பகுதி நெய்தல் எனவும், முல்லையும், குறிஞ்சியும் பல காரணிகளால் சிதைவடைந்து அதன் இயல்பிழந்திருப்பின் அதனை பாலை எனவும் பிரித்திருந்தனர்.

புவியமைப்பினை பொறுத்து தமிழகத்தில் நான்கு வகை இயற்கையான சூழல் தொகுப்புகள் இருப்பதை அறியலாம். மலைகள் (Mountanins), மேட்டுநிலங்களும் சமவெளிகளும் (Plateau and plains), நன்னீர்நிலைகள் (Freshwater region), கடற்பகுதி (Coastal region) என இருக்கிறது. இந்த சூழல் தொகுதிகளில் இருக்கும் பல வகையான வாழிடங்களும், அதில் வாழும் உயிரினங்களும் காட்டுயிர்ச் சரணாலயம், தேசியப் பூங்கா, புலிகள் காப்பகம், உயிர்மண்டலக் காப்பகம், பல்லுயிர்ப் பாதுகாப்பகம் என பல வகைகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தமிகத்தில் இருக்கும் காட்டுயிர் சரணாலயங்கள் எவை ?

சரணாலயங்கள் அமைக்கப்படுவது பொதுவாக ஒரு சில வகை உயிரினங்களுக்காகவே. உதாரணமாக களக்காடு காட்டுயிர்ச் சரணலாயம் சோலை மந்திகளுக்காவே (சிங்கவால் குரங்கு) ஏற்படுத்தப்பட்டது. அதாவது ஓரிடத்தில் உள்ள அரிய அல்லது அபாயத்திற்குள்ளான உயிரினத்தை பாதுகாக்கும் பொருட்டு அது வாழும் இயற்கையான சூழல் சரணாலயமாக அங்கீகரிக்கப்படுகிறது. அந்த உயிரினம் ஒரு விலங்காக மட்டுமல்லாமல் தாவரமாகவோ அல்லது தாவரச் சமுதாயமாகக் கூட இருக்கலாம். இதனால் அந்த குறிப்பிட்ட உயிரினம் மட்டுமல்லாமல் அதன் வாழிடமும் சேர்ந்து பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 11 இடங்கள் காட்டுயிர்ச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவை:

1. முதுமலை காட்டுயிர்ச் சரணாலயம்
2. கோடியக்கரை காட்டுயிர்ச் சரணாலயம்
3. களக்காடு காட்டுயிர்ச் சரணாலயம்
4. இந்திரா காந்தி காட்டுயிர்ச் சரணாலயம்
5. முண்டந்துறை காட்டுயிர்ச் சரணாலயம்
6. வல்லநாடு வெளிமான் சரணாலயம்
7. ஸ்ரீவில்லிப்புத்தூர் நரை அணில் சரணாலயம்
8. கன்னியாகுமரி காட்டுயிர்ச் சரணாலயம்
9. கொடைகானல் காட்டுயிர்ச் சரணாலயம்
10. கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம்
11. காவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்

தேசியப் பூங்காக்கள் எவை ?

இயற்கைச் சூழலில் வாழும் ஒரு குறிப்பிட்ட உயிரினத்தை மட்டும் முன்னிறுத்தி சரணாலயங்கள் என பாதுகாக்காமல் அவற்றின் உயிர்ச் சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஏற்படுத்தப்படுபவை தேசியப் பூங்காக்கள். தமிழகத்தில் இது வரை 5 இடங்கள் தேசியப் பூங்காக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவை:

1. கிண்டி தேசியப் பூங்கா
2. மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரிகள் தேசியப் பூங்கா
3. இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா
4. முதுமலை காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா
5. முக்குறுத்தி தேசியப் பூங்கா

தமிழகத்தில் இருக்கும் புலிகள் காப்பகங்களை எவை?

புலிகளின் பாதுகாப்பிற்காக 1973 இல் ஆரம்பிக்கப்பட்ட புலிகள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நான்கு புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புலிகளை வேட்டையாடுவதைத் தடுக்கவும், அவற்றின் வாழிடங்களைப் பாதுகாப்பதுவுமே இத்திட்டத்தின் தலையாய நோக்கம். தமிழகத்தில், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகியவை இருக்கின்றன.

யானைகள் காப்பகங்கள்

இந்திய வனங்களில் பரவியுள்ள யானைகளின் பாதுகாப்பிற்காக யானைகள் திட்டம் இந்திய அரசால் 1992 இல் தொடங்கப்பட்டது. யானைகளின் வாழிடங்களையும், அவற்றின் வழித்தடங்களையும் பாதுகாத்தல், மனிதர் - யானை மோதலை குறைத்தல், கோயில்களிலும், வனத்துறையிலும் வளர்க்கப்படும் யானைகளின் நலன் காத்தல் ஆகியவையே இந்த திட்டத்தின் குறிக்கோள்களாகும்.

இதன் விளைவாக யானைகள் பரவியிருக்கும் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் யானைகளுக்கான காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் இதுவரை 32 யானைக் காப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன. யானைகள் பல இடங்களுக்கு வெகுதுரம் சுற்றித்திரிவதாலும், வலசை போவதால் இவற்றின் காப்பகங்களும் அவை அடிக்கடி செல்லக்கூடிய பரந்த பலவகையான வாழிடங்களை உள்ளடக்கிய நிலவமைப்பில் அமைந்துள்ளது. சில காப்பகங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரந்து அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் 4 யானைக் காப்பகங்கள் உள்ளன.

1. நீலகிரி யானைக் காப்பகம் (நீலகிரி- கிழக்குத் தொடர்ச்சிமலை பகுதிகள் சேர்ந்தது)

2. நிலாம்பூர் யானைக் காப்பகம் (நிலாம்பூர்-அமைதிப்பள்ளத்தாக்கு-கோயம்பத்தூர் பகுதிகள் சேர்ந்தது)

3. ஸ்ரீவில்லிப்புத்தூர் யானைக் காப்பகம் (கேரளாவில் உள்ள பெரியார் யானைக் காப்பகத்துடன் சேர்ந்தது)

4. ஆனைமலை யானைக் காப்பகம் (ஆனைமலை – பரம்பிக்குளம் பகுதிகள் சேர்ந்தது)

பறவைகள் சரணாலயம்

பறவைகளுக்கு நாம் வகுக்கும் எல்லைகள் கிடையாது. ஆகவே அவை ஓரிடத்தில் மட்டும் வாழாமல் பல விதமான இடங்களில் பறந்து வாழும் இயல்புடையவை. குறிப்பாக நீர்ப்பறவைகளில் பல ஓரிடத்தில் கூட்டமாகக் கூடுகட்டி இனவிருத்தி செய்யும் இயல்புடையவை. உலகின் வடக்கு பகுதியிலிருந்து அங்கு கடும் குளிர் நிலவும் காலங்களில் தமது இனப்பெருக்கத்தை முடித்துக் கொண்டு தெற்கு நோக்கி இரைதேட வரும் வலசைப் பறவைகளுக்கு உள்நாட்டு நீர்நிலைகள் முக்கியமான வாழிடம். உள்நாட்டுப் பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்ய ஏதுவான வாழிடங்கள் உள்ள பகுதிகளையும், வலசை வரும் பறவைகளுக்காகவும் தமிழகத்தில் 13 பறவைகள் சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளான. அவை:

1. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
2. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
3. பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயம்
4. கரிக்கிளி பறவைகள் சரணாலயம்
5. சித்ரங்குடி பறவைகள் சரணாலயம்
6. கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம்
7. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
8. வடுவூர் பறவைகள் சரணாலயம்
9. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
10. மேல்செல்வனூர்-கீழ்செல்வனூர் பறவைகள் சரணாலயம்
11. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
12. கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
13. ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம்

இதுதவிர தமிழகத்தில் உயிர்மண்டலக் காப்பகங்கள் (Biosphere Reserves) உள்ளன. யுனெஸ்கோவின் மனிதனும் உயிர்மண்டலமும் (Man and Biosphere-MAB) திட்டம் 1971ல் ஆரம்பிக்கப்பட்டு உலகம் முழுவதும் பல உயிர்மண்டலக் காப்பகங்கள் நிறுவப்பட்டன. பல்லுயிரியத்திற்கு பெயர்போன பகுதிகளின் இயற்கை எழில் மற்றும் வளம் குறையாமல் போற்றிப் பேணுதல், அவற்றின் சூழல் சீரழியாமலும், வளம் குன்றாமலும் பாதுகாத்தல், காடுசார் பொருட்களை முறையாகப் பயன்படுத்துவதிலும், பல்லுயிர் பாதுகாப்பிற்கும் உள்ளூர் சமூகத்தினரின் பங்களிப்பை ஊக்குவித்தல், இங்கு வாழும் பழங்குடியினரின் கலாசாரத்தை குலைக்காமல் அவர்களின் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பது இதன் நோக்கமாகும். அதன்படி தமிழகத்தில் மூன்று உயிர் மண்டலக் காப்பகங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன அவை:

1. நீலகிரி உயிர்மண்டலக் காப்பகம்
2. மன்னார் வளைகுடா உயிர்மண்டலக் காப்பகம்
3. அகஸ்தியமலை உயிர்மண்டலக் காப்பகம்

தகவல்கள் உதவி - காட்டுயிர் ஆராய்ச்சியாளர்: ப.ஜெகநாதன்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com