இலவசங்கள் அறிவிப்பு: சமூக முன்னேற்றத்திற்கா ? வாக்கு அரசியலுக்கா ?

இலவசங்கள் அறிவிப்பு: சமூக முன்னேற்றத்திற்கா ? வாக்கு அரசியலுக்கா ?
இலவசங்கள் அறிவிப்பு: சமூக முன்னேற்றத்திற்கா ? வாக்கு அரசியலுக்கா ?

இந்தியாவைப் பொறுத்தவரை தேர்தல் நேரங்களில் இரண்டு விஷயங்கள் அதிகம் பேசு பொருளாக உருவெடுக்கின்றன. ஒரு சாரார் ‘வளர்ச்சி அரசியல்’ என்ற முழக்கத்தை முன்வைக்கிறார்கள். ஆகவே இவர்கள் இலவசங்களால் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்கிறனர். மற்றொரு சாரார் எளிய மக்களை சமூக ரீதியாக சமநிலைப்படுத்த ‘இலவசம்’ தேவை என அதிகம் பேசுகின்றனர். இவர்கள் ‘வளர்ச்சி அரசியல்’ என்பதே மேட்டுக்குடி மனோபாவம் என்கிறார்கள்.

ஆக, இலவசங்கள்தான் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கிறதா? அது வாக்காக மாறுகிறதா? இது குறித்து பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் என்ன சொல்கிறார். “இலவசங்களை இரண்டு வகையானதாக உள்ளன. ஒன்று; தேவையான பொருட்களை மக்களுக்கு வழங்குவது. முந்தைய 2006 தேர்தலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி என அறிவித்தார். அதை ஏன் அறிவித்தார் என்றால் அப்போது விவசாயிகள் மிகுந்த வறுமையால் எலிக்கறி சாப்பிடுவதாக செய்திகள் வந்தன. அதை அறிந்தே அவர் அந்த அரிசி திட்டத்தை அறிவித்தார். ஆனால் அதே நிலை இன்றைக்கு இருக்கிறதா என்பது கேள்வி? அது நீடிக்க வேண்டி இருக்கிறதா ? என்பதிலும் பல்வேறு கருத்துவேறுபாடுகள் உள்ளன.

அதேநேரத்தில் ஸ்கூட்டி,கிரைண்டர், மிக்ஸி வழங்குவதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரை இது ஆடம்பரமான விஷயம். பெண் பிள்ளைகளுக்குப் பள்ளிகளில் சைக்கிள் கொடுத்தார்கள். அது கட்டாயம் தேவைதான். அது எந்த அளவுக்குப் பெண் பிள்ளைகளுக்கு உதவியது என்பதே நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். பள்ளிகளில் குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கினோம். அது நிச்சயம் வேண்டும். அதன் தேவை இன்றைக்கு இருக்கவே செய்கிறது. ஆகவே இதை நாம் இலவசம் என்று கூறுவதே தவறானது. இலவசத்தைப் பொறுத்தவரை ஒரு கால வரம்பை நாம் ஏற்படுத்த வேண்டும். ஆடம்பர இலவசங்களை சட்டரீதியாக தடுக்க முடியாது. சட்டத்தில் அதற்கு இடமே இல்லை. அரசியல்வாதிகள்தான் இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்” என்கிறார். இவரிடம் இலவசங்கள் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன என நம்புகிறீர்களா என்றோம்.

“இலவசங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றாது. 2006 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகனாக இருந்தது எனக் கூறினார்கள். அதை அப்படியே முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியும் ஏற்றுக்கொண்டார். 2016 தேர்தலில் கூட இதே நிலை இருந்தது. திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையில் 1.12 சதவீதம் அளவுக்குத்தான் வெற்றிக்கான வாக்கு வித்தியாசமாக இருந்தது. அப்போது மக்கள் இலவசங்களை வைத்து மக்கள் வாக்களித்தைபோல தெரியவில்லை. இங்கே ஜாதி வித்தியாசத்தை வைத்துதான் இங்கே ஓட்டுப் போடுகிறார்களே தவிர, இலவசத்திற்காக ஓட்டுப் போடுவதைப் போலத் தெரியவில்லை” என்கிறார் ராதாகிருஷ்ணன். ஆனால் கெஜ்ரிவால் அரசு அறிவித்த இலவசங்கள் தேர்தலில் சில தாக்கங்களை ஏற்படுத்தவில்லை என நினைக்கிறீர்களா ? என்றதற்கு ஆம். நிச்சயம் டெல்லியில் ஒரு பாதிப்பை உருவாக்கி இருக்கிறது. அங்குதான் வித்தியாசத்தை உணர்கிறேன் என்கிறார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் ஷயாம் என்ன சொல்கிறார். “இலவசங்கள் என்பதை நாம் மக்கள் நலத் திட்டங்கள் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலேயே அதனை விலையில்லா பொருட்கள் என மாற்றிவிட்டோம். இலவசங்களை எதிர்க்கும் மனோபாவம் ஒரு மேட்டுக்குடி மனோபாவம்தான். நிச்சயமாக இலவசத் திட்டங்கள் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்றுதான் நான் நம்புகிறேன். சமூக இடைவெளியை இதன் மூலமாகத்தான் குறைக்க முடியும். அரவிந்த் கெஜ்ரிவால் கூட நம்முடைய பாணியைதான் பின்பற்றி இருக்கிறார். அவர் ஒரு ஐஆர்எஸ் அதிகாரி. நன்றாகப் படித்தவர்தான். அவர் நம் பாணியைத்தானே நம்பி பின்பற்றி இருக்கிறார். அவருக்கு அது வாக்காக மாறத்தானே செய்திருக்கிறது.

எங்கள் கிராமத்தில் கூட இலவச கரவை மாடு திட்டம் நல்ல பாதிப்பை ஏற்படுத்தியதை நான் கண்முன்னே பார்த்திருக்கிறேன் ஒரு மாடு ஒருநாளைக்கு 5 லிட்டர் பால் கரந்தால்கூட தினம் 100 ரூபாய் அவனுக்குப் பணமாகக் கிடைத்துவிடும். ஒரு ஆடு கொடுப்பது என்பது ஒரு கடை வைத்துக் கொடுப்பதற்குச் சமம்” என்கிறார்.

அதே போல ஸ்கூட்டி கொடுப்பது கூட எல்லோருக்கும் நாம் கொடுக்கவில்லை. உழைக்கும் பெண்களுக்குத்தான் கொடுத்தோம். அதுகூட மானியத்தில்தான் கொடுத்தோம். அதற்கு வருமானச் சான்று எனப் பல சான்றுகளை நீங்கள் கொடுத்தால்தான் கிடைக்கும். இதை இலவசம் எனக் கூற முடியாது. எது இலவசம் என்றால் குடும்ப அட்டை மூலம் வழங்கப்படுவதுதான் இலவசம். உதாரணமாக எம்ஜிஆர் ஆட்சியில் செருப்பும் பல்பொடியும் கொடுத்தோம். அது ஏன் கொடுத்தோம்? பாதச் சுத்தம் பல்சுத்தம் இவை இரண்டும் இல்லாததால்தான் நோய் வருவதாகச் சொன்னார்கள். ஆகவே அதை இலவசமாக வழங்கினால் சுகாதாரத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை குறைக்கலாம் என்றார்கள்.

ஆகவே அதை ஏற்று எம்ஜிஆர் கொடுத்தார். இன்று பல்பொடியும் செருப்பையும் தரத் தேவையில்லை. அதை மக்களே வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் சைக்கிள் கொடுப்பது தேவைதான். என்னைப் பொறுத்தவரைத் தேர்தல் காலத்தில் அறிவிக்கப்படும் இலவசங்கள் ஓரளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவே செய்கின்றன. ஆகவேதான் இன்று முதல்வர் பழனிசாமி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கிறார். அவர் ஏன் அதை முன்பே அறிவிக்கவில்லை. அவர் இன்று நிலையான ஒரு அரசு வந்துவிட்டது என நம்புகிறார். அதனால் இன்று அறிவிக்கிறார். இது இலவசம் இல்லை. ஆனால் அது வாக்காக மாறும் என்கிறார் பத்திரிகையாளர் ஷாம்.

மேலும் இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சி. மகேந்திரன், “ஏழ்மை என்பது இன்றும் நாடு முழுவதும் அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட மக்களுக்கு இந்த இலவசங்கள் என்பது குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டுப் போடுவதற்கு தூண்டல் அறிக்கையாக இருக்கிறது. ராஜசேகர ரெட்டி அதேபோல கருணாநிதி, அதன்பின் ஜெயலலிதா என இவர்கள் தேர்தல் நேரத்தில் இலவசங்களை அறிவித்தபோது அது ஒரு காலத்தில் வெற்றிக்கு உதவவே செய்துள்ளது. இதை முதலில் இலவசங்கள் என இதை சொல்வதே தவறு. ஏனென்றால் யாரும் யாருக்கும் கொடுக்கின்ற இலவசமே இவை இல்லை. உழைப்பாளிகளிடம் இருந்து எடுத்து கொண்டதின் ஒரு சிறுபகுதியைத் திரும்பக் கொடுக்கிறது அரசு. அப்படிதான் அதைப் பார்க்கவேண்டும். ஆனால் அது சாராயம் கொடுப்பதாக இருக்கக்கூடாது. ஒருவருக்கு 100 மில்லி சாராயம் கொடுப்பதால் சந்தோஷம் அடைகிறான். அது போன்றதாக இந்த இலவசம் இருக்கக் கூடாது. அது மக்களின் வாழ்வை முன்னேற்றக்கூடியதாக இருக்க வேண்டும்” என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com