தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் - நடிகை நமீதா பளீர் பேட்டி

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் - நடிகை நமீதா பளீர் பேட்டி
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் - நடிகை நமீதா பளீர் பேட்டி

அ.தி.மு.கவிலிருந்து கடந்த வருடம் பா.ஜ.கவில் சேர்ந்த நடிகை நமீதாவுக்கு, தற்போது மாநில செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.  ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்று தமிழில் சொல்லி  உற்சாகத்தோடு பேச ஆரம்பித்தவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்…  

புதிய பொறுப்பின் மூலம் பா.ஜ.கவை வளர்க்க என்ன திட்டமிட்டுள்ளீர்கள்?

என்னை செயற்குழு உறுப்பினராக்கியது ரொம்ப சந்தோஷமா இருக்கு. தற்போது, கொரோனா சூழ்நிலையால் கொஞ்சம் அமைதியாக இருக்கிறேன். கொரோனா முடிந்ததும் கட்சியின் வளர்ச்சிக்கு இன்னும் கடுமையாக பாடுபடுவேன். தமிழ்நாடு முழுக்கவே பெண்களுக்கான வேலை வாய்ப்பு சரியாக அமையவில்லை. கொரோனாவால் நிறைய பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெண்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களுக்கு, உதவி செய்யவும் வாய்ப்புகளை கொடுக்கவும் ஆளில்லை. இதனையெல்லாம் கருத்தில்கொண்டே எனது செயல்பாடுகள் இருக்கும். மேலும், விவசாயத்தை ஊக்கப்படுத்தவும் குறைவான முதலீட்டில் அதிக லாபம் எடுப்பது எப்படி என்றும் திட்டமிட்டுள்ளோம். எங்கள் இடத்திலேயே விவசாயம் கொஞ்சம் செய்வதோடு, அதுகுறித்த ஆராய்ச்சியை நானும் கணவரும் செய்து வருகிறோம். அதில், நல்ல மகசூல் வந்தால் அனைவரிடமும் வெளிப்படுத்தலாம் என்றிருக்கிறேன். மற்ற நாடுகளில் நாயை அடித்தால்கூட உடனே கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார்கள். ஆனால், இங்கு அதுபோன்ற நடவடிக்கைகள் குறைவு. அதனால், விலங்குகளின் நலனையும் கருத்தில்கொண்டுள்ளேன்.

அ.தி.மு.கவிலிருந்து விலகி பா.ஜ.கவில் சேர என்னக் காரணம்?

அ.தி.மு.கவே பா.ஜ.க கூட்டணியில் சேரும்போது நமீதா சேருவதில் என்ன தவறு இருக்கிறது? பா.ஜ.க பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி. இதுவே, என்னை இம்ப்ரெஸ் பண்ணியது. வானதி சீனிவாசன் மேடம் எனக்கு மிகவும் பிடித்த தலைவர். எல்லோரிடமும் இனிமையாக பழகும் குணம் கொண்டவர். அவரைப் போன்ற பல பெண் தலைவர்கள் கட்சியில் இருக்கிறார்கள். பெண்கள் அதிகமாக இருப்பதையும், அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும்தான் நான் முதலில் பார்த்தேன்.

பெண்களுக்காக போல்டாக பேசும் நீங்கள், பாஜகவின் ஏ.பி.வி.பி தமிழகத் தலைவர் ஒரு பெண்ணின் வீட்டு முன்பு சிறுநீர் கழித்ததை எப்படி பார்க்கிறீர்கள்?

எனது இன்ஸ்டாகிராமில் மகளிர் தினம், அன்னையர் தினம் குறித்து எந்த பதிவையும் இட்டதில்லை. பெண்கள் எல்லா நாளும் மதித்து போற்றப்பட வேண்டியவர்கள். இதுபோல், எல்லா கட்சிகளிலும் ஒரு சதவீதம் இரண்டு சதவீதம் நடந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், ஒரு இடத்தில் நடக்கும் கெட்ட விஷயத்தை மட்டுமே பார்க்கும் நாம் பாஸிட்டிவ் விஷயத்தையும் பார்க்கவேண்டும். யார் தவறு செய்தாலும், அவர் எந்த பொறுப்பில் இருந்தாலும் சட்டம் தன் கடைமையை செய்யும்.  அவர் அப்படிப் பண்ணியதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? அரசியல் என்பது ஒரு கடல். அதற்குள் நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் இருக்கும்.

அ.தி.மு.கவில் உங்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை என்பதால்தான் பா.ஜ.கவில் சேர்ந்தீர்களா?

கரெக்ட்… கரெக்ட். ஜெயலலிதா அம்மா இருந்ததால்தான் நான் அ.தி.மு.கவில் இணைந்தேன். ஜெயலலிதா அம்மா மறைவுக்குப் பிறகு இரண்டு வருடம் காத்திருந்தேன். ஆனால், எனக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. என்னை அழைக்கவுமில்லை. மதிப்பு இல்லை என்று தெரிந்ததும் பா.ஜ.கவில் இணைந்தேன். ஆனால், பா.ஜ.கவில் எனக்கு பொறுப்பு கொடுத்துள்ளனர். நிறைய மீட்டிங்குகளில் கலந்துகொள்கிறேன். எல்லா முக்கிய முடிவுகளின்போதும் எல்லோரையும் அழைத்து ஆலோசனை செய்கிறார்கள். பெண்கள் வேலைவாய்ப்பு, விவசாயிகள் நலம், விலங்குகள் நலம், இயற்கையைக் காத்தல் ஆகிய நான்குத் துறைகளிலும் பணியாற்ற எனக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று சொன்னேன். அவர்களும் உங்களுக்கு சுதந்திரம் உண்டு என்று சொல்லிய பிறகே பா.ஜ.கவில் சேர்ந்தேன். மேலும், இந்தக் கட்சியின் சிஸ்டம் சூப்பராக உள்ளது. எல்லோரும் தொடர்பில் இருக்கிறார்கள். ஊக்கப்படுத்துகிறார்கள். நமது கட்சிக்கு நம்மீது நம்பிக்கை இருக்கவேண்டும். பா.ஜ.க என்மீது நம்பிக்கையோடு உள்ளது.

’தாமரை மலந்தே தீரும்’ என்பதை மனப்பாடம் பண்ணீட்டீங்களா?

கட்சியில் சேர்ந்தபோதே ’தாமரை மலர்ந்தே தீரும் என்பதை’ மனப்பாடம் செய்துவிட்டேன். நிச்சயம் தாமரை மலர்ந்தே தீரும்…(நம்மிடம் தடையில்லாமல் சொல்லிக்காட்டுகிறார்) பா.ஜ.க வெற்றிபெறும். மத்திய அரசு மாநிலங்களுக்கு எவ்வளவோ உதவி செய்கிறார்கள். அதனையெல்லாம் வாங்கி தமிழக அரசு செய்வதுபோல் காட்டிக்கொள்கிறது. பிரதமர் மோடி நாட்டுக்காகவே உழைக்கிறார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

பா.ஜ.கவில் சேர்ந்து ஆறு மாதம்தானே ஆகிறது… அதற்குள்ளேவா? தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற விருப்பம் இப்போது இல்லை. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எண்ணம் மட்டும்தான் உள்ளது. அதற்கு, கட்சியில் ஆதரவும் வேண்டும். பெண்களுக்கான கனவுகள் நிறைவேற வேண்டும். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற யோசிக்கவே இல்லை.

ஆகஸ்ட் மாதம், சசிகலா விடுதலையாகவுள்ளார்  என்று அவர் விடுதலையானால் உங்கள் கூட்டணி கட்சியான அதிமுகவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று பேசப்படுகிறதே?

அதுகுறித்து கருத்து கூற எதுவும் இல்லை.

நீங்கள் பிறந்த குஜராத்தை விட்டுவிட்டு ஏன் தமிழக கட்சிகளில் இணையவேண்டும்?

என் குடும்பம் எல்லாம் குஜராத் சூரத்தில் வசிக்கிறார்கள். ஆனாலும், நான் தமிழகத்திலேயே வசிக்க காரணம், எனக்கு இந்த மாநிலம்தான் பிடித்திருக்கிறது. என்மீது தமிழக மக்கள் அன்பு காட்டுவதால், வாழ்க்கையையே தமிழகத்திற்கு அர்ப்பணித்துள்ளேன். அரசியல்வாதி ஆனதற்கு காரணம், என் மச்சான்ஸ். தமிழக மக்களை எனது குடும்பத்தினராகப் பார்க்கிறேன். கஷ்டமோ நஷ்டமோ இனி தமிழகத்திலேயே வாழ்வேன். நான் நினைத்திருந்தால் வேறு மொழிகளில் சென்று நடித்திருக்கலாம். அப்படி செய்யவில்லை. இப்போதும் எனக்கு நிறைய ஃபேன்ஸ் ஃபாலோவ் செய்கிறார்கள்.

 ஆனால், பா.ஜ.க குறைவான வாக்குகளை வாங்கும் கட்சியாக உள்ளதே?

ரோல்ஸ் ராய்ஸ் காரை உருவாக்க ஆறு மாதமாகும். அதற்காகவே, அதன் விலை அதிகம். மற்றக் கார்கள் என்றால் 15 நாட்களிலேயே ரெடி செய்து விடலாம். ஆனால், ரோல்ஸ் ராய்ஸ் காருக்காக ஆறு மாதம் காத்திருக்கிறோம். சிறந்த கார் என்பதால் மதிப்பு எப்படி என்று பாருங்கள்.  பா.ஜ.கவும் ரோல்ஸ் ராய்ஸ் கார் போன்றது, நல்ல பேர் வாங்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்கிறது. அப்படித்தான், பா.ஜ.கவும் தமிழகத்தில் நல்ல முறையில் வரும். அதற்கு, கொஞ்சம் நேரம் பிடிக்கும். எனது செயல்பாடுகளால் தாமரையை தமிழகத்தில் மலர வைப்பேன்.

தமிழக அரசியல்வாதியாகி விட்டும் இன்னும் தமிழ் சரியாக பேச வரவில்லையே?

இப்போதுக்கூட எனக்கு தமிழ் நன்கு தெரியாது. 20 சதவீத தமிழ்தான் தெரியும். ஆனால், மாற்றிக்கொள்ள நினைக்கிறேன். நிறைய குழப்பம் இருக்கிறது. இனிமேல் தமிழ் கற்றுக்கொள்ள ரெடியாகப்போகிறேன். மூன்று நான்கு மாதங்களில் கற்றுக்கொள்வேன்.

இ.ஐ.ஏ, ஓ.பி.சி இட ஒதுக்கீடு, தேசியக் கல்விக் கொள்கை போன்ற பிரச்சனைகளில் மக்கள் பா.ஜ.கவை கடுமையாக எதிர்க்கிறார்களே?

எங்கள் கட்சித் தலைவர் முருகன் ஜி இவை குறித்து, நிறைய விளக்கங்களை தெளிவாக சொல்லிவிட்டார். இதற்கு, நான் எதுவும் கருத்து சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன்.

சினிமாவில் இனி எப்போது பார்க்கலாம்?

முன்பு மாதிரி லெஃப்ட் அண்ட் ரைட் என சைடு ரோல் எல்லாம் நடிக்க மாட்டேன். நல்ல கதைகள் வந்தால் தரமான கேரக்டரில் மட்டும் நடிப்பேன்.

 ஊரடங்கு எப்படி போகிறது?

இன்னும் லாக்டவுன் கடுமையாக போடவேண்டும். அப்படி இருந்தால்தான் கொரோனா குறையும். எனது கணவர் சிலம்பத்தில் ஆர்வம் கொண்டவர். அவரைப் பார்த்துதான் இம்ப்ரெஸ் ஆகி சிலம்பமும் கற்றுக்கொண்டேன். அவர், என்மீது மிகுந்த அக்கறைக் கொண்டவர். அரசியலில் நாலேஜ் அதிகம் அவருக்கு உண்டு என்பதால், என்னை ஊக்கப்படுத்தி வழிகாட்டுகிறார்.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com