ஊரடங்கிற்கு பின் காத்திருக்கும் தேர்வுகள்.. தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?

ஊரடங்கிற்கு பின் காத்திருக்கும் தேர்வுகள்.. தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?
ஊரடங்கிற்கு பின் காத்திருக்கும் தேர்வுகள்.. தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?

கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டிற்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வந்தது. இதுகுறித்து விளக்கமளித்த உயர்கல்வித்துறை அமைச்சர், கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டின் தொடக்கத்தின்போது இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி தேர்வுகள் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். இந்த ஆண்டிற்கான தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை; தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், கல்லூரிகள் ஜீன் மாதத்தில்தான் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மார்ச் 17-ஆம் தேதி தொடங்கிய விடுப்பு அநேகமாக ஜூன் மாதத்தில் நிறைவடையும் என்ற செய்தி மாணவர்களை குதூகலத்தில் ஆழ்த்தியிருக்கலாம். ஆனால், நீண்ட விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு நீண்ட குதிரைபந்தயம் காத்திருக்கிறது. ஏனெனில் கல்லூரி திறக்கப்பட்ட உடனேயே தேர்வுகளை எழுதி முடித்துதான் அடுத்தாண்டு வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தேர்வுக்கும் மற்றொரு தேர்வுக்குமான இடைவெளியாக சில மணி நேரங்கள் மட்டுமே கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

இதனிடையே ஊரடங்கு உத்தரவு காலத்திற்கு பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மே 3-ஆம் தேதிக்கு பின்னர் பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்பட உள்ளன. 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோல் நீட் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து 1.17 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஏப்ரல் மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த JEE Main தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஆசிரியர் கல்வி, சட்டப்படிப்பு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊரடங்கிற்கு பின் காத்திருக்கும் தேர்வுகளுக்கு, தற்போது தேர்வர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கல்வியாளர் ரமேஷ் பிரபு கூறுகையில், “மாணவர்கள் ஏற்கெனவே படித்து முடித்து தயாராகி தேர்வுக்கு போகும் நேரத்தில்தான் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. கிட்டத்தட்ட எல்லோருமே தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் அடிப்படை உண்மை. இந்த காலக்கட்டத்தில் முடிந்தவரை அவர்களின் குடும்பத்தோடு ரிலாக்ஸாக இருந்துவிட்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட பிறகு படித்தால் போதும் என்றே நினைக்கிறேன். திரும்ப திரும்ப நாள்தோறும் படிச்சியா என்று துன்புறுத்தினால் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுவார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கடுமை காட்டக்கூடாது. மாணவர்களே விருப்பப்பட்டு படித்தால் படிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் கூறுகையில், “ஆசிரியர்கள் மாணவர்களுடன் கம்யூனிகேட் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டும். மாணவர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. மாணவர்கள் பெரும்பாலும் செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். அதன் மூலம் அவர்களுக்கு வீடியோக்களை அனுப்பி படிக்க சொல்லலாம். ஆசிரியர்கள் நினைத்தால் மாணவர்களை 3 மணி நேரமாவது படிக்க வைக்க முடியும். பத்தாம் வகுப்பு மாணவர்களை பொருத்தவரை 3 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் படிக்கலாம். நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு என்சிஆர்டி புத்தகமே போதும். இந்த ஊரடங்கு பெற்றோருக்கு பணத்தை மிச்சப்படுத்தியுள்ளது. கோச்சிங் கிளாஸ்லாம் போகவே தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com