“ நீங்கள் சாப்பிடுவது பல ஆண்டு பதப்படுத்திய சிக்கனாக இருக்கலாம்” : ஷாக் ரிப்போர்ட்

“ நீங்கள் சாப்பிடுவது பல ஆண்டு பதப்படுத்திய சிக்கனாக இருக்கலாம்” : ஷாக் ரிப்போர்ட்
 “ நீங்கள் சாப்பிடுவது பல ஆண்டு பதப்படுத்திய சிக்கனாக இருக்கலாம்” : ஷாக் ரிப்போர்ட்

ஞாயிற்றுக் கிழமைகள் ஆகிவிட்டால் குடும்பத்தோடு பன்னாட்டு உணவு விடுதிகளை தேடிப்போவது நம் மக்களிடையே கலாச்சாரமாக உருவாகிவிட்டது. ரத்த கலரில் இருக்கும் உணவுப் பண்டங்களை பார்த்தால் குழந்தைகளின் நாக்கு ஊறல் எடுக்கிறது. விபரீதம் அறியாத நாம் அதை வாங்கிக் குழந்தைக்கு கொடுக்கிறோம். அவ்வளவும் ஆபத்து என்கிறார் கோவை அரசுக்கல்லூரி மருத்துவர் மற்றும் பேராசிரியர் ரவிக்குமார்.  

 “தினமும் வீட்டில் இட்லி, தோசை, சப்பாத்தியை மட்டுமே சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்துப்போன பிள்ளைகள் ஹோட்டலுக்கு போனதும் விரும்பும் ஐட்டம் பூரி. இல்லனா பரோட்டா. அதையும் தாண்டி கலர்கலரா என்ன சாப்பாட்டு ஐட்டங்கள் இருக்கோ அதை எல்லாம்  விரும்புவாங்க. இந்த ஐட்டங்கள் அனைத்துமே ஆபத்தானவைதான். சாப்பாட்டில் கலக்கப்படும் கலர் சாயங்கள் எல்லாமே ரசாயனம் சார்ந்தவை. ஆனவே ஆபத்து நிச்சயம். கூடவே காரம் அதிகமாக இருக்கும். உப்புத் தூக்கலாக இருக்கும். எண்ணெய் அதிகம் கலந்திருக்கும்.  ஊரில் ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’னு சொல்வாங்க. அது நிஜம் அல்ல. பலருக்கு உப்புத் தேவை. சிலருக்கு தேவை இருக்காது. 

அதே போல விதவிதமான சட்டினிகளை அறவே தொடக் கூடாது. அதிலுள்ள பொருட்கள் அனைத்தும் வேக வைக்காத பண்டங்கள். வேகாத பொருள் என்பதால் அதில் அதிக கிருமிகள் கலந்திருக்கக் கூடும். இவை சுகாதாரமில்லாமல் தயாராக அதிக வாய்ப்புள்ளது. அதனால் அதுவும் கூடாது. க்ரீம், பழங்கள் கலந்த ஃப்ரூட்ஸ் கலந்த பண்டங்கள், பீட்சா, பர்க்கர் போன்ற உணவுகளை கட்டாயம் வாங்கிக் கொடுக்கவே கூடாது.  அளவுக்கு மீறிய கொழுப்புச் சத்துக்கள் கலந்திருப்பதால் உடலுக்கு இவை கெடுதல் தரக்கூடியவை. பொதுவாக குழந்தைகளை அதிகம் ஈர்க்கும் பல உணவுப் பொருட்களில் அதிக இனிப்பு, அதிக உப்பு, அதிக கொழுப்பு நிறைந்தவை. எனவே அவை கூடாது. 

அடுத்து பெரும்பாலான சைனீஸ் உணவுகளில் அஜினமோட்டோவை அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள். அஜினமோட்டோ மூச்சுத்திணறலை உருவாக்கும். ஏற்கெனவே சுவாசக் கோளாறுகள் இருக்கும் பிள்ளைகளுக்கு ஆஸ்துமாவை வர வைக்கும். உணவில் அதிக நிறம் கலந்த ரசாயன பொருட்களை பயன்படுத்துவதால் கேன்சர் வருவதாக ஓர் ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள்.  இதே போலதான் ’பாஸ்தா’வும். நூடுல்ஸ், சேமியா, பரோட்டா, ஜவ்வரிசி, ப்ரெட் இவை எல்லாமே மைதாவில் தயாராகும் உணவுகள். மைதா என்பது நுண்ணிய மாவு. ஃபைபரே இல்லாதவை. இவை குடலுக்குள் போய் அப்படியே இரண்டு, மூன்று நாட்கள் தங்கிவிடும். இதில் நார்ச்சத்து இல்லாததால் மலச்சிக்கல்களை உருவாக்கும். சிறு வயது முதலே குழந்தைகள் இவற்றை உண்டு வளர்ந்தால் வயதான காலத்தில் பல்வேறு குடல் சம்பந்தமான வியாதிகள் வரலாம்” என மூச்சுவிடாமல் முழங்குகிறார் ரவிக்குமார். 

பாரம்பர்ய உணவுகளில் இந்தப் பிரச்னைகள் இல்லை. மிக சாதாரணமாக வீட்டு உணவுகளைப்போல தயாரிக்கப்படும் ஹோட்டல் உணவுகளில் எந்தக் குறையும் இல்லை. ருசி, மாடர்ன் என்ற பெயரில் வழங்கப்படும் உணவுகளில்தான் கொஞ்சம் பாதுகாப்பு தேவை. அதே வேளையில் எல்லா உணவு விடுதிகளும் இதே போன்றுதான் என கூற முடியாது. 

“ நம் நாட்டில் கிடைக்கும் பன்னாட்டு அசைவ உணவு வகைகள் பல மிகமிக ஆபத்தானவை. பல ஆண்டுகள் பதப்படுத்தி வைத்த சிக்கன், மட்டன் ஐட்டங்கள் என்பது பல பேருக்கு தெரியாது. அதை போன்ற கறிகளைத்தான் நம்மூருக்கு அனுப்பி வைக்கிறார்கள். பலரும் சிக்கனில் லெக் பீஸை மட்டுமே விரும்புவார்கள். மற்ற பாகங்களை விரும்புவதில்லை. ஆகவே மற்ற பாகங்களில் உள்ள கறியை அப்படியே பதப்படுத்தி வைத்து வேறுவிதமான சமையலுக்கு அதை பயன்படுத்திக் கொள்வார்கள். அதற்காக பல ஆண்டுகள் வரை அதை பதப்படுத்தி பயன்படுத்துகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. அதனால்தான் அதில் சிலசமயங்களில் புழு உருவாகி விடுகிறது. அப்படியே அது சமையலுக்குள் வந்துவிடுகிறது. ஆகவே கவனம் தேவை. 

இப்போது பல உணவு சாலைகளில் ரொட்டி, சிக்கன் போன்றவைகளை சுட்டுக் கொடுக்கும் முறை வந்திருக்கிறது. அதுவும் ஆபத்துதான். இதை போன்ற உணவை சுடுவதால் அதிலுள்ள புரோட்டீன் சிதைந்து, கருகிவிடுகிறது. இதை உண்பதாலும் கேன்சர் வரலாம். இதைவிட முக்கியம் மோர் சாதத்துடன் எடுத்துக் கொள்ளும் ஊறுகாயினால் கூட கேன்சர் வருகிறது என கண்டறிந்திருக்கிறார்கள். வருடக்கணக்காக அது எண்ணெய், மிளகாய்த் தூளில் ஊறிக் கிடப்பதால் பல விளைவுகளை தருவதாகத் தெரிய வந்துள்ளது.

சாதாரணமாக ‘மோர்’ குடிக்கும் போதுகூட கவனமாகச் செயல்பட வேண்டும். மோர் நல்லது என்றாலும் அதில் கலக்கப்படும் நீர் மாசுபட்டதாக இருக்கலாம். ஹோட்டலில்  கொடுக்கப்படும் பெரிய சைஸ் அப்பளத்தால் கூட சிக்கல் வரலாம். இது ஜவ்வரிசியில் தயாராவது. ஜவ்வரிசியைக் கூழாகக் கரைத்து சாதாரண தரையில் ஊற்றிக் காய வைத்து இதை தயாரிக்கிறார்கள். ஆகவே இது சுகாதாரமற்றது. இதை எப்படி சுகாதாரமில்லாமல் தயாரிக்கிறார்கள் என்று ஓர் ஆவணப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல்தான் பானி பூரி. சரியான இருப்பிட வசதியே இல்லாத வெளிமாநில இளைஞர்களால் தயாராகும் இந்த உணவில் பெரிய ஆபத்துகள் உண்டு. 

குழந்தைகள் வீட்டில் சாப்பிட்டாலும் ஹோட்டலில் சாப்பிட்டாலும் காய்க்கறிகளை தனியே எடுத்து வைத்துவிடுவார்கள். அப்படி உண்ண நாம் அனுமதிக்கக் கூடாது. காய்க்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள சொல்லி அறிவுறுத்த வேண்டும். தூய்மையான தண்ணீரா என பார்த்து பருக வேண்டும். ஹோட்டலில் கிடைக்கும் பழங்களாக இருந்தால் கூட அவற்றை தவிர்க்க வேண்டும். அதன் சுகாதாரம் கேள்விக்குரியதே. ஆகவே கூடாது. பெரும்பானவர்கள் இந்த மாதிரியான சின்னச்சின்ன விஷயங்களைதான் தவற விடுவார்கள். யாரும் மலை தடுக்கி விழுவதில்லை. சின்ன கல் தடுக்கிதான் விழுவார்கள். அதனால் கவனம் முக்கியம்” என்று அடுக்கடுக்காக புகார் பட்டியலை படிக்கிறார் மருத்துவர் ரவிக்குமார். 
ஆகவே உஷார் மக்களே! 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com