”EB பில் வெறும் 140தான்! ஃபேன் போடவே மாட்டோம்”.. தொட்டிக் கட்டு வீட்டின் சிறப்பம்சம் என்ன?

”EB பில் வெறும் 140தான்! ஃபேன் போடவே மாட்டோம்”.. தொட்டிக் கட்டு வீட்டின் சிறப்பம்சம் என்ன?
”EB பில் வெறும் 140தான்! ஃபேன் போடவே மாட்டோம்”.. தொட்டிக் கட்டு வீட்டின் சிறப்பம்சம் என்ன?

எங்க வீட்ல நாங்க பேனே போடுறதில்ல வீடு எப்பவுமே குளுகுளுன்னு இருக்கும் வீட்டுக்கு மின்சார கட்டணம் ரூ.140 தான் வரும். சகல வசதிகளுடன் இயற்கையோடு கட்டப்பட்ட வீடு குறித்து இங்கு காணலாம்...

இயற்கை மேல் எனக்கிருந்த ஆர்வத்தால் கட்டப்பட்டது தான் இந்த வீடு என பேச ஆரம்பித்தார் வீட்டின் உரிமையாளரும் ஆசிரியருமான முருகானந்தம். நான் புதுசா ஒரு வீடுகட்டலாம்னு முடிவு செஞ்சிருந்த சமயம் பலவிதமான வீடுகளுக்கு போய்வந்தேன். அந்த வீடெல்லாம் ரூ.70 லட்சம், ரூ.80 லட்சம், என கோடி கணக்கில் செலவு செய்து கட்டியிருந்தார்கள். ஆனால், இரவு நேரத்தில் தூக்கவே முடியல. என்ன காரணம் ஏன் இப்படி வெக்கையா இருக்கு என கையோடு பழைய வீடுகளுக்குச் சென்று பார்த்தோம். அங்கே இருக்கும் வெப்ப நிலையை பார்த்தபோது மிகவும் குறைவாக இருந்தது.

அதுக்கு அப்புறமா பொறியாளர் இளஞ்சேரன் சாரை சந்தித்து இதேபோன்ற ஒரு வீட்டை கட்டலாம் என்ற ஆர்வத்தில் இந்த வீட்டை கட்ட ஆரம்பித்தோம். இந்த வீட்டை கட்ட ஆரம்பித்தபோது, இந்த காலத்துல போயி இப்படி ஒரு வீட்டை கட்டுறியே என்று அப்பா அம்மா என பலரும் எதிர்ப்பு தெருவிச்சாங்க. இந்த வீட்டை பற்றி அவங்களுக்கு புரியவெச்சதுக்குப் பிறகு வீட்டை கட்ட ஆரம்புச்சோம். ஒரு ஆண்டு காலத்தில் இந்த வீட்டை கட்டிமுடித்த பிறகு, வீட்டில் ஒரு உயிரோட்டம் இருப்பதுபோல் உணர்கிறேன்.

இப்ப எங்க வீட்டுக்கான மின்சார செலவு ரூ.140 முதல் 150 ரூபாய்க்குள் தான் வருகிறது. இரவு நேரத்தில் 90 சதவீதம் மின்விசிறியை பயன்படுத்துவதே இல்லை. ஏசி, ஏர்கூலர் இல்லாமல் வாழ முடியாது என்ற சூழல் இருக்கும் நிலையில். மின்விசிறி இல்லாமல் வாழக்கூடிய சூழலை இந்த வீடு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. குறைவான செலவில் நமது மரபை மீட்டெடுக்கும் வண்ணம் இந்த வீட்டை கட்டியிருக்கோம். இந்த வீடால் என் மனதில் திருப்தியும் ஏற்பட்டிருக்கு. எங்க வீட்டுக்கு வரும் ஒவ்வொருவரும் இங்கு நிலவும் தட்பவெப்ப நிலை குறித்து பேசும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

முருகானந்தம் சார் எங்களை சத்தித்த போது தொட்டிக் கட்டி வீடு கட்டலாம் என்று சொன்னோம் என ஆரம்பித்தார் இந்த வீட்டை கட்டிய பொறியாளர் இளஞ்சேரன், வீட்டை கட்டுவதற்கு தகுந்தாற்போல இடமும் செவ்வக வடிவில் இருந்தது. அதன் அடிப்படையில் டிசைன் செய்து கட்டியுள்ளோம். வீட்டில் உள்ள வெப்பத்தை முற்றத்தில் உள்ள மையப்பகுதியில் குவித்து வெளியே அனுப்புவது. அதேபோல் வெளியில் இருந்து குளிர்ந்த காற்று உள்ளே வருவது போன்று அமைத்துள்ளோம். மழை காலங்களில் தண்ணீரும் வீட்டின் உள்ளே வரும்படி கட்டியுள்ளோம். வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களது அறையில் சென்று படுத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருப்பது போல் இந்த நடுமுற்றம் வீட்டின் இருக்க வாய்ப்பில்லை. மாறாக வீட்டில் உள்ள ஒவ்வொருவருடைய முகத்தையும் மற்றவர்கள் பார்க்கும் வகையில் உள்ளதால் குடும்ப உறவு பழக்க வழக்கங்களும் மேம்பட்டு நல்லதொரு வாழ்க்கையை இந்த வீட்டின் வடிவம் உருவாக்கும்.

இந்த வீடு வடக்கு வாசல் வீடு என்பதால், மேற்கு பக்கம் இரண்டு படுக்கை அறையும் இருப்பதால் மதியத்திற்கு மேல் ஈரோடு பகுதியில் வெயில் அதிகமாக இருக்கும். அதனால் அந்த பக்கமுள்ள சுவரை ஒன்னேகால் அடி சுவராக கட்டியுள்ளோம். இப்ப நீங்க எந்த நேரத்துல போய் அந்த அறையில் உட்கார்ந்தாலும், வெப்பநிலை மாற்றத்தை நீங்கள் உணர முடியும் என்றார்.

வீட்டின் உரிமையாளரும் வீட்டை கட்டியவரும் இந்த வீட்டை பற்றி ஆகா ஓகோ என பேசுகிறார்களே அப்படி இந்த வீட்டில் என்னதான் இருக்கு என்பதை விரிவாக பாhக்கலாம்....

திண்ணை முகப்போடு நம்மை வரவேற்கும் தொட்டிக் கட்டு வீடு. 1700 சதுரடியில் ரூ.45 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு ஈரோடு அருகே முள்ளாம்பரப்பு என்ற கிராமத்தில் இயற்கை எழில்கொஞ்சும் அழகோடு அமைந்துள்ளது. காண்போர் கண்களை கவரும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு வருபவர்களை மேலும் கவரும் வகையில் வீட்டின் முன்புற சுவற்றில் பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது. மழை பெய்தால் வழுக்காமல் இருப்பதற்காக திண்ணை அமைப்பின் கார்னரில் கருங்கற்களை பயன்படுத்தி இருக்காங்க.

திண்ணையில் உள்ள மேற்கூரைக்கு பனங்கைகளை பயன்படுத்தியதோடு பூச்சிகள் அரிக்காமல் இருப்பதற்காக முந்திரி எண்ணெய் பூசியிருக்காங்க. பனங்கைக்கு மேல் பிரேம் செய்து அதில் டபுள் டைல்ஸ் ரூபிங் செய்திருக்கிறார்கள். வீட்டின் மெயின் டோர் அருகே உள்ள பகுதியில் கோவில் கோபுரங்களில் உள்ளது போல் சுதை வேலைப்பாட்டுடன் கூடிய அமைப்பை ஏற்படுத்தி இருக்காங்க. இது பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கு,

மறு பயன்பாடு செய்யப்பட்ட செட்டிநாடு கதவு. அதைத் திறந்து உள்ளே சென்றதும் நம்மை ஆச்சரியப்பட வைத்தது தொட்டிக் கட்டு நடு முற்றம். இந்த வீட்டோட பெயர் காரணமும் இதுதான். பூமியோட நடுப்பகுதியை முற்றம் என்று சொல்வாங்க. ஒரு வீட்டோட நடுப்பகுதியில் தான் வெப்பம் சேரும். அந்த நடுப்பகுதியில் தான் நடு முற்றம் வைப்பாங்க. அதேபோலதான் இங்கு மறு வேலைப்பாடு செய்யப்பட்ட நான்கு தூண்களுக்கு மத்தியில் இந்த முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.

மண்சார்ந்த வீடுகள் கட்டும்போது எல்லா தேவைக்கும் பழமையான பொருட்கள் கிடைப்பதில்லை. அதனால், இருப்பதைக் கொண்டு முற்றத்தை அழகாக கட்டியிருக்காங்க. பெரும்பாலும் வீடுகளில் மரத்தூண், கல்தூண் மற்றும் கான்கிரீட் தூண்களை பார்த்திருப்போம். ஆனால், இந்த வீட்டில் செங்கல்களைக் கொண்டு தூண் செய்திருக்கிறார்கள். இங்குள்ள நான்கு தூண்களும் வீட்டின் மொத்த எடையையும் தாங்கிப்பிடிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த நான்கு தூண்களையும் மிகவும் வலிமையாக அமைத்துள்ளார்கள்.

அடுத்து உள்ளது பெரிய ஹால். இந்த ஹாலில் உள்ள தரைப்பகுதி முழுவதும் இயற்கையாக மண்ணில் செய்யப்படும் வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டைல்ஸ் பயன்படுத்தி இருக்காங்க. இந்த வீட்டில் உள்ள சுவர்கள் அனைத்தும் 9 இன்ச் தடிமனில் நாட்டு செங்கலை பயன்படுத்தி கட்டியிருக்காங்க. செங்கலுக்கு இடையே சிமெண்ட் கவலையை பயன்படுத்தாமல், அந்த பகுதியில் கிடைக்கும் சளிக்காத மண், நெல் உமி, சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி கலவைசெய்து செங்கலுக்கு இடையே இடைவெளியின்றி கட்டியிருக்காங்க.

அதன் மேல் பூச்சுக்காக நன்றாக சளித்த மண்ணுடன் சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் மற்றும் தண்ணீர் கொண்டு செய்த கவலையை பயன்படுத்தி ஸ்மூத் பினிசிங் செய்திருக்கிறார்கள். இதனால் வெளியே இருக்கும் வெப்பநிலைக்கும் வீட்டின் உள்ளே உள்ள வெப்ப நிலைக்கும் மாற்றம் உள்ளது. இந்த வீட்டில் காற்றோட்ட வசதிக்காக எட்டு தட்டி ஜன்னல் வெச்சிருக்காங்க. இந்த ஜன்னலை நமக்கு தேவையான அளவுக்கு திறந்து மூடிக்கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த வீடு முழுவதும் சீலிங் அமைக்க பில்லர் ஸ்லாப் பயன்படுத்தி இருக்காங்க. இதில் முற்றிலும் டபுள் லேயர் ஓடுகளை பயன்படுத்தி இருக்காங்க. இதனால் மேலே உள்ள வெப்பம் வீட்டினுள் இறங்காமல் இருக்கும்.

வீட்டோட மாஸ்டர் பெட்ரூமுக்கும் வியட்நாம் டைல்ஸ் பயன்படுத்தியிருக்காங்க. அதேபோல் வீட்டைச் சுற்றி சுவரின் இரண்டு அடி உயரத்திற்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இயற்கையான மண்ணைக் கொண்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளதால் வீட்டின் உள்பகுதி இருட்டாக காணப்படும். எனவே இருட்டாக இருக்கக்கூடாது என்பதற்காக வெள்ளை கலர் அடித்துள்ளார்கள். மற்ற வீடுகளுக்கும் இந்த வீட்டிற்கும் ஒரு வித்தியாசம், வீட்டில் உள்ள பீம்கள் அனைத்தும் செங்கல் பயன்படுத்தியே அமைத்துள்ளார்கள். அதேபோல் இந்த வீட்டோட சமையல் அறை முழுவதும் வெர்டிபைய்ட் டைல்ஸ் பயன்படுத்தியிருக்காங்க. பிளாக் ஜெட் கிரானைட்டும் பயன்படுத்தி இருக்காங்க.

சமையலறைக்கும் ஹால் பகுதிக்கும் இடையே உள்ள சுவரில் காற்றோட்டம் கொடுக்கும் வகையில் ஜாலி ஒர்க் டிசைன் பண்ணியிருக்காங்க. இந்த வீட்டோட பவுண்டேஷன் அமைக்க கருங்கற்களையும் சிமெண்ட்-க்கு பதிலாக அந்த பகுதியில் கிடைத்த ஓடை மண்ணை பயன்படுததியிருக்காங்க. அதேபோல் வீட்டில் ரொம்ப முக்கியமாக 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்துள்ளார்கள். அதனுள் ஃபோரும் வெளியே ஃபில்டரும் அதை;துள்ளார்கள். இந்த நீரைதான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். பருவமழை பொய்த்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் ஒவ்வொரு வீட்டிலும் இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பது மிகவும் முக்கியம்.

இந்த வீடு பற்றிய தகவல்களi கண்டிப்பா உங்களுக்கு பிடித்திருக்கும். இது போன்ற பல வித்தியாசமான வீடுகள் பற்றிய தகவல்களை மீண்டும் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com