எழும்பூர் தொகுதியின் வெற்றி வாய்ப்பு யாருக்கு? - ஓர் அலசல்

எழும்பூர் தொகுதியின் வெற்றி வாய்ப்பு யாருக்கு? - ஓர் அலசல்
எழும்பூர் தொகுதியின் வெற்றி வாய்ப்பு யாருக்கு? - ஓர் அலசல்

சென்னையின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான எழும்பூரில் இந்த முறை பிரதான கட்சிகள் தவிர்த்து களத்தில் இரண்டு பெண் வேட்பாளர்கள் உள்ளனர். அங்கு தேர்தல் களம் சொல்வதென்ன?

எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் இதுவரை 14 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 10 முறை திமுகவும், காங்கிரஸ் 2 முறையும், தேமுதிக மற்றும் சுயேச்சை தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, எழும்பூர் தொகுதியில் இருந்து ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்தத் தேர்தலில், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஜான்பாண்டியன், தேமுதிக சார்பில் பிரபு, நாம் தமிழர் கட்சி சார்பில் கீதா, மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரியதர்ஷினி ஆகியோர் களம் காண்கிறார்கள்.

எழும்பூர் தொகுதியை பொறுத்தவரை திமுக கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ரவிச்சந்திரன் 55 ஆயிரத்து 060 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த முறை திமுக சார்பில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பரந்தாமன் போட்டியிடுகிறார். திமுக வழக்கறிஞர் அணியைச்சேர்ந்த இவர், கடந்த தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த முறை தொகுதி மாறி எழும்பூரில் களம் காண்கிறார்.

அதிமுக சின்னத்திலேயே போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஜான்பாண்டியன், 20 ஆண்டுகளுக்கு முன்பாக, 2001 தேர்தலில் இதே எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டவர். அப்போது வெறும் 84 வாக்குகள் வித்யாசத்தில் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியிடம் தோல்வியை சந்தித்தார். 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் திமுகவை எதிர்த்து களமிறங்கியுள்ளார்.

அமமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் பிரபு இத்தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2016 தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் கீதாலட்சுமி நான்காண்டு காலமாக அரசியலில் இருந்தாலும், அவர் சந்திக்கும் முதல் தேர்தல்இது.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான பிரியதர்ஷினி, 2019 ல் நடந்த இடைத்தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு இருபதாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றவர். இவருக்கு தேர்தல் புதிதல். ஆனால் தொகுதி புதிது. போட்டியிடும் வேட்பாளர்களில் தேமுதிக வேட்பாளர் மட்டுமே சொந்த தொகுதியில் களம் காண்கிறார். மற்றவர்கள் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com