நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் அடுக்கடுக்காக ஆயிரம் கலப்படங்கள்!

நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் அடுக்கடுக்காக ஆயிரம் கலப்படங்கள்!
நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் அடுக்கடுக்காக ஆயிரம் கலப்படங்கள்!

உணவுதான் உடல் வலிமைக்கு ஆதாரம் என்பது பழையக்காலம். உணவே மருந்து என்பது இந்தக் காலம். ஆனால் அந்த உணவு பலநேரங்களில் உயிரையே போக்கக்கூடியதாக மாறிவிடுகிறது. வியாபார வெறியால் நேரும் விளைவுகள் இவை. இலாப நோக்கத்திற்காக பலர் பாலில் கலப்படம் செய்கிறார்கள்.

அதுவும் குழந்தைகள் குடிக்கும் பாலில் நுரை பொங்குவதற்காக சோப்பு பவுடரை கலக்கிறார்கள். அதையறியாமல் பலர் நுரைப் பொங்கும் பாலை ருசியாக விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அதிகாலை குடிக்கும் தேநீரில் தொடங்கி இரவு செரிமானத்திற்காக சாப்பிட்டுப் படுக்கும் இரண்டு வாழைப்பழம் வரை இன்றைய ‘கலப்பட வியாபார உலகம்’ கால் பதித்துவிட்டது.

இன்றைக்கு மருத்துவமனைக்கு வரும் பலர் ‘ஃபுட் பாய்சன்’ பிரச்னையால் வருகிறார்கள். நஞ்சு எது? உணவு எது? என்று பிரித்து அறியமுடியாத அளவுக்கு கலப்பட உலகம் நம்மை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த உணவுக் கலப்படம் குறித்து கடந்த ஆண்டு உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருந்தது. அதில், மூன்றில் ஒருபங்கு உணவு கலப்படமானது என அறிவுறுத்தி இருந்தது. மேலும் இந்த உணவுக் கலப்படத்தில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்தியாவில் பல மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் உணவுக் கலப்படம் பற்றி அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதற்கு இந்தப் புள்ளிவிவரங்களே சாட்சி.

ஆனால் அந்தளவுக்கு தமிழகம் உணவு விஷயங்களில் விழிப்புணர்வுடன் உள்ளதா? என்றால் பதில் சோகம் கலந்ததாகவே உள்ளது. கடந்த சில தினங்கள் முன்னால், கிண்டி பகுதியை ஆய்வு செய்த உணவுத்தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சாப்பிடும் சாப்பாட்டை அள்ளி அப்படியே குப்பையில் கொட்டினர். அந்தச் சாப்பாட்டில் சில வேதிப் பொருட்களை கலந்திருக்கிறார்கள். அதில் மஞ்சள் பொடியை தூவியபோது அது அப்படியே சிகப்பாகிவிட்டது. அதிகம் சாப்பிடக் கூடாது என்பதற்காக சோடா உப்புக்களை பயன்படுத்துவதால் நேர்ந்த விளைவு இது. அளவு சாப்பாட்டிற்கு காசு கொடுக்க அஞ்சி அன் லிமிட்டெட் மீல்ஸ் பக்கம் போனால் இப்படி சுண்ணாம்புக் கலந்துதான் தருவார்கள் இல்லையா?

“நாம் வாங்கும் எண்ணெய் பொருட்களில்கூட கலப்படம் இருக்கிறது. வெளியே சூரியகாந்தி எண்ணெய் எனப் போட்டிருப்பார்கள். அதிலுள்ள விளக்கத்தைப் படித்தால் 20 சதவீதம்தான் சூரியகாந்தி இருக்கும். மீதம் 80 சதவீதம் பாமாயில் இருக்கும். இதை தடுக்க சில நாட்கள் முன்பு மதுரை நீதிமன்றத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி ஒரு வழக்குப் போட்டார்கள். ஆனால் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மக்களின் வேலை. அரசு வேலையல்ல என்று அதை தள்ளுபடி செய்துவிட்டார்கள்.

சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் பஜ்ஜி, போண்டா போடுவார்கள். ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய எண்ணெய்யை பலமுறை காய்ச்சிக் காய்ச்சி கறுத்து வண்டல் ஆகும் அளவுக்குப் பயன்படுத்துவார்கள். அதனால் புற்றுநோயே வருவதாக கண்டுபிடித்துள்ளனர். பல நட்சத்திர ஹோட்டல்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை வாங்கி சிலர் சில்லறைக் கடைகளுக்கு சகாய விலையில் விற்கிறார்கள். அதை வாங்கிப் பயன்படுத்துவதால் பல வியாதிகள் வருவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க அரசே ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு இப்படி பெறும் ஆயிலை crude oil ஆக விற்றுவிடுகிறார்கள். இதற்கு eat right campaign எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்” என்கிறார் கோவை அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மருத்துவர் ரவிக்குமார்.

இந்த உணவுக்கலப்படம் பற்றி சில கருத்துகளை உணவுப்பாதுகாப்பு அதிகாரி சதாசிவம் நம்முடன் பகிர்ந்துகொண்டார். அவர், “மிகமுக்கியமான கலப்படம் என்றால் அது பச்சைப் பட்டாணிதான். அதில் அதிக பச்சைநிறம் தெரிவதற்காக ரசாயனம் கலக்கிறார்கள். அதை வாங்கி நீரில் போட்டால் அதில் உள்ள பச்சை நிறம் அப்படியே வெளியேறுவதை பார்க்கலாம். அதேபோல மிளகில் பப்பாளி விதையை கலக்கிறார்கள். தேனில் சர்க்கரை பாகுவைக் சேர்க்கிறார்கள். நெய்யில் வனஸ்பதி, மற்றும் ஆயிலை கலக்கிறார்கள். இதை எல்லாம் தண்ணீரில் போட்டால் அப்படியே கண்டுபிடித்துவிட முடியும்” என்கிறார்.

இந்த ரசாயன சேர்க்கைதான் இருப்பதிலேயே ஆபத்தானது என்கிறார் உணவு பற்றி பல பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வரும் அக்குபஞ்சர் மருத்துவர் போப்பு. “திடக் கலப்படங்களை விட இந்தத் திரவ கலப்படம்தான் ஆபத்தானது. மஞ்சள் பொடியில் பல சாயங்களைக் கலக்கிறார்கள். மிளகாய்ப் பொடியில் சிகப்புச் சாயப் பொடிகளைக் கலக்கிறார்கள். பார்க்க ஈர்ப்பாக இருக்க வேண்டும் என்பதால் இதை செய்கிறார்கள். நம் குடலில் ஒட்டிக் கொண்டுள்ள திடக்கழிவை வெளியேற்றிவிடலாம். ஆனால் குடலுடன் ஒட்டிக் கொள்ளும் இந்தச் சாயத்தை அகற்றவே முடியாது. அது ஆபத்தானது” என்கிறார் இவர்.

2011 முதல் 2019 வரை தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மொத்தம் 23,346 உணவுப் பொருட்களை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2010 முதல் 2019 வரை உணவுக் கலப்படம் குறித்து 5812 புகார்கள்தான் வந்துள்ளன. இதன் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் 2366 உணவுப் பொருட்கள் உண்பதற்கே உகந்தவை அல்ல என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கால இடைவெளியில் 1861 குற்ற வழக்குகளும் 4481 பொது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கொள்ளப்பட்ட குற்ற வழக்குகளில் 1 கோடியே 51 லட்சம் ரூபாய் வரையும் பொதுவழக்குகளில் 8 கோடியே 48 லட்சம் வரையும் அபராதம் தொகைகள் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

சரி, இத்தனை ஆபத்தானதாக மாறியுள்ள உணவுக்கலப்பட சந்தை பற்றிய புகார்களை யாரிடம் தெரிவிப்பது? எங்கே முறையிடுவது? இது முக்கியமானது. இதற்கு உணவுப் பாதுகாப்புத்துறை இயக்குநர் மதுசூதனன் சில விளக்கங்களை அளித்துள்ளார். “பொதுவாக எந்த ஒரு உணவகத்திற்குச் சென்றால் அங்கே ஒரு வாட்ஸ் அப் எண் போடப்பட்டிருக்கும். 9444042322 என்பதுதான் அந்த எண். இந்த எண்ணிற்கு எந்த ஊரில் இருந்து புகார் அளித்தால் உடனே அது பதிவாகிவிடும். அடுத்த சில மணிநேரங்களில் எங்கள் அதிகாரிகள் அங்கே இருப்பார்கள்” என்கிறார் இவர்.

இன்றைக்கு அரிசில் செய்யப்படும் கல் கலப்படம் என்பது ஒரு பிரச்னை அல்ல; அதை பிரித்து நீக்கிவிடலாம். ஆனால் மூன்று நாள்கள் வரை சேமித்து வைத்த மாவில் தோசை சுடுவது அதில் சோடா உப்புகளைக் கலப்பது, சாம்பார் என்ற பெயரில் வெறும் வெண்ணீரில் பவுடரை வாங்கிக் அதை கலந்து குழம்பாக்குவது எனப் பல பயங்கரங்கள் நடக்கின்றன. அதை அறியாமல் ஆயுளைக் காப்பாற்ற ஆயிரம் முயற்சிகளை மக்கள் மேற்கொண்டாலும் அதற்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. இதை தெளிவை நுகர்வோராகிய நாம் அடிமனதில் அழுத்தமாக பதிய வைக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com