இந்த அறிகுறிகள் தென்படுகிறதா? - உங்கள் ரத்தக்குழாய்களில் அடைப்பு என்று அர்த்தமாம்!

இந்த அறிகுறிகள் தென்படுகிறதா? - உங்கள் ரத்தக்குழாய்களில் அடைப்பு என்று அர்த்தமாம்!
இந்த அறிகுறிகள் தென்படுகிறதா? - உங்கள் ரத்தக்குழாய்களில் அடைப்பு என்று அர்த்தமாம்!

ரத்தக்குழாய்களில் ரத்தக்கட்டிகள் ஏற்படுவது மிகவும் தீவிரமான, புறக்கணிக்கக்கூடாத ஒரு பிரச்னை. இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற மோசமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். உடலின் எந்த பகுதியில் ரத்தக்கட்டிகள் உருவானாலும் அவற்றில் சில தாமாகவே கறைந்துவிடும், சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ரத்தக்கட்டி என்றால் என்ன?

ஒரு காயம் அல்லது அடியால் உடலின் சீரான இயக்கத்தில் மாற்றம் ஏற்படுவதால் திரவ நிலையிலுள்ள ரத்தமானது கொத்தான ஜெல் போன்ற வடிவத்திற்கு மாறும் நிலையே ரத்தக்கட்டி எனப்படுகிறது என்கிறது ஹெல்த்கேர். இந்த கொத்தான ரத்தக்கட்டிகளில் புரதங்கள், ரத்தத்தட்டுகள் மற்றும் செல்கள் போன்றவை உள்ளன. இது சாதாரணமாக நடைபெறக்கூடியதுதான் என்றாலும், அந்த கட்டிகள் தானாக கரைந்துவிடவேண்டும். அப்படி கரையாதபோது அது மிகவும் மோசமானதாக, உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடியதாக மாறிவிடும்.

ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும் ரத்தக்கட்டிகள் மோசமான தீங்குகளை விளைவிக்கிறதில்லை. ஆனால் பொதுவாக ரத்தக்கட்டிகள் ரத்த ஓட்ட மண்டலத்தில் நகர்ந்துகொண்டே இருக்கும். இது தீங்கு விளைவிக்கக்கூடியவை. ரத்தக்கட்டிகள் நரம்புகள் வழியாக நகர்ந்துகொண்டே சென்று இதயம் மற்றும் நுரையீரலை அடையும்போது அது அடைப்பை ஏற்படுத்தி, ரத்த ஓட்டத்தை தடுத்துவிடும்.

ரத்தக்கட்டிகள் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும்?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரத்த கட்டிகள் ஏற்பட்டு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நிறைய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. ரத்தக்கட்டுக்கான வெளிப்படையான அறிகுறிகள் தென்படாவிட்டாலும், சில அறிகுறிகள் பிற பிரச்னைகளுக்கான அறிகுறிகள் போன்றேதான் இருக்கும் என்கிறது ஆய்வுகள். ரத்தக்கட்டிகளை மருத்துவர்கள் உதவியின்றி எளிதில் கண்டறிய முடியாது. பொதுவான அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகள் தெரிந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது.

கால்கள் மற்றும் தோள்களில் தெரியும் வெளிப்படையான அறிகுறிகள்

வீக்கம் மற்றும் அழற்சி
கால்கள் மற்றும் தோள்ப்பட்டைகளில் அதீத வலி
வீக்கத்தால் மென்மை
நிறம் மாறுதல்

இந்த அறிகுறிகள் ரத்தக்கட்டின் அளவைப் பொருத்து மாறுபடும் என்கின்றனர் நிபுணர்கள். பெரிய கட்டியாக இருந்தால் வலி தாங்கமுடியாத அளவுக்கு இருக்கும். அதுவே சிறிய கட்டிகளாக இருக்கும் பட்சத்தில் அறிகுறிகளே தென்படாமல் கூட இருக்கலாம்.

இதயத்தில் தெரியும் அறிகுறிகள்

இதய தமனிகளில் கட்டிகள் உருவாவதை coronary artery thrombosis, அதாவது இதய தமனிகளில் ரத்த உறைவு என அழைக்கின்றனர். இவை ரத்த ஓட்டத்தை முற்றிலும் தடுத்து மாரடைப்புக்கு வழிவகுக்கிறது. இதயத்தில் ரத்தக்கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்,

அதீத மார்பு வலி
லேசான தலைவலி
மூச்சுத்திணறல்
முதுகு, கழுத்து மற்றும் தாடையில் வலி
அதீத வியர்வை
குமட்டல் மற்றும் தலைசுற்றல்
இதய துடிப்பு அதிகரிப்பு

வயிற்றில் தெரியும் அறிகுறிகள்

வயிற்றுப்பகுதியில் ஏற்படும் ரத்தக்கட்டிகளை deep vein thrombosis, அதாவது தீவிர நரம்பு ரத்த உறைவு என அழைக்கின்றனர். இதனுடைய அறிகுறிகள்,

வயிற்றில் தாங்கமுடியாத வலி
தீவிர குமட்டல் மற்றும் வாந்தி
மலத்தில் ரத்தம் வெளிப்படுதல்
வயிற்றுப்பொருமல் மற்றும் நீர்த்தேக்கம்
வயிற்றுப்போக்கு
வயிற்றில் நீர்க்கோர்த்தல்

மூளையில் தெரியும் அறிகுறிகள்

மூளையில் உருவாகும் ரத்தக்கட்டிகளை ஸ்ட்ரோக் என அழைக்கின்றனர். இந்த கட்டிகளானது மூளைக்கு ஆக்சிஜன் செல்வதை தடுத்து ஹைபோசியாவிற்கு வழிவகுக்கிறது. ஆக்சிஜன் இல்லாமல் மூளையால் இயங்கமுடியாது என்பதால் இது மரணம் அல்லது மோசமான உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
மூளையில் ரத்தக்கட்டிகள் உருவானால் தென்படும் அறிகுறிகள்,

முழுமையான அல்லது பாதி முடக்குவாதம்
உடலில் உணர்ச்சியின்மை அல்லது பலவீனம்
புரிந்துகொள்வதில் சிரமம்
தன்னிலையிழத்தல்
பேசுவதில் சிரமம், வாய் குளறுதல்
சமநிலையின்மை
தலைவலி
வலிப்பு

பக்கவாதத்தின் அறிகுறிகளும், மாரடைப்பின் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். எனவே இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

நுரையீரலில் தெரியும் அறிகுறிகள்

நுரையீரலில் ரத்தக்கட்டு உருவாவதை pulmonary embolism, அதாவது நுரையீரல் சுவாச அடைப்பு என்கின்றனர். இதன் அறிகுறிகள்,

திடீர் மூச்சுத்திணறல்
மார்பில் வலி
படபடப்பு
மூச்சு நின்றுபோதல்
நாள்பட்ட இருமல்

ரத்தக்கட்டிகளுக்கான காரணிகள் என்னென்ன?

1. நோய் அல்லது காயம்
2. எலும்பு முறிவுகள்
3. அமர்ந்தே இருக்கும் வாழ்க்கைமுறை
4. பரம்பரை கோளாறுகள்
5. தன்னுடல் எதிர்ப்புசக்தி கோளாறுகள்
6. உடற்பருமன் மற்றும் அதீத எடை
7. மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவு

உடலின் எந்த பகுதியில் ரத்தக்கட்டிகள் தென்படுவதைப் போன்று அறிகுறிகள் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி அவை தீங்கு விளைவிக்கக்கூடியவையா? அதற்கான சிகிச்சைமுறைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வது அபாயத்திலிருந்து காப்பாற்றும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com