தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதே கொசு ஒழிப்புதான்..... வலைதளங்களில் பரவும் புதுக்கருத்து

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதே கொசு ஒழிப்புதான்..... வலைதளங்களில் பரவும் புதுக்கருத்து
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதே கொசு ஒழிப்புதான்..... வலைதளங்களில் பரவும் புதுக்கருத்து

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலின் பாதிப்பு தற்போது மிகவும் கடுமையாக உள்ளது. டெங்கு பாதிப்பு இல்லாத மாவட்டங்களே என்பதை விட கிராமங்களே இல்லை என்று கூறும் அளவில் பாதிப்பு ஊடுருவி உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. டெங்கு மற்றும் காய்ச்சலால் நாள்தோறும் உயிரிழப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. சிறுவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நோய்க்கு பலியாகி வருகின்றனர்.

டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. சமூக ஆர்வலர்களும் களத்தில் இறங்கி விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் மருத்துவமனைகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். நிலவேம்பு கசாயமும் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது. பப்பாளி இலை சாறும் பலரால் பரிந்துரை செய்யப்படுகிறது.

காய்ச்சல் பாதிப்பு கடுமையாக இருக்கும் நிலையில், தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது நோய்க் கிருமிகளை உருவாக்கும் கொசுக்களை ஒழிப்பதற்கு தான் என்று சிலர் கூறி வருகின்றனர். பட்டாசுகளை வெடிக்கும் போது அதிலிருந்து வெளியாகும் கந்தக புகை கொசுக்களையும் அதன் முட்டைகளையும் அழிக்கும் என்று அவர்கள் விளக்கமளிக்கின்றனர். 

வாகனங்கள், தொழிற்சாலைகள், குப்பைகள் எரிப்பு உள்ளிட்டவற்றால் நாள்தோறும் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுபாட்டைவிடவா ஒருநாள் தீபாவளி கொண்டாட்டத்தில் வந்துவிட போகிறது? என்றும் சிலர் கூறுகின்றனர். 

 பருவமழை காலங்களில் உருவாகும் கொசுக்கள் மூலமே குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் போன்றோரை மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்கள் தாக்குவதாகவும், அத்தகைய கொடிய தொற்று நோய்களை தவிர்ப்பதற்காகத்தான் தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் பழக்கம் உருவானது என்றும் சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நோயற்ற வாழ்வை பெற அதிக அளவில் பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும் என்றும் அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பது கொசுக்களை ஒழிக்கவே என்ற கருத்துக்கு ஆதரவாகவும் அதனை கிண்டல் செய்தும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. அதில், தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க இயற்கை ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் சதி செய்வதாகவும், தற்போது பயன்படுத்தப்படும் கொசு மருந்துக்குப் பதிலாகத்தான் அந்தக் காலத்தில் பட்டாசு வெடித்து கொசுக்களையும் பாக்டீரியாக்களையும் நமது முன்னோர்கள் விரட்டி வந்துள்ளார்கள் என்று அவர்கள்  மீம்ஸ்கள் பதிவிடுகின்றனர்.

இதை எதிர்த்து நிலவேம்பு கசாயத்திற்கு பதிலாக எல்லோருக்கும் பட்டாசுகள் கொடுத்து வெடிக்க செய்யலாம் என்று வேறு சிலர் மீம்ஸ்கள் பதிவிடுகின்றனர்.  ’இது தெரியாம இத்தனை நாளா கொசு மருந்து புகையைப் போட்டுட்டு இருக்காங்க. வீட்டுக்கு வீடு பட்டாசு கொடுத்தா கொசு பயந்து ஓடிரப் போகுது’ என்று கிண்டல் செய்துள்ளனர்.

 மேலும், தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் கொசு ஒழியுமோ இல்லையோ, ஆனால், தீபாவளிக்கு பின் ‘மெட்ராஸ் ஐ’அதிக அளவில் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை என்று சிலர் கூறுகின்றனர். 

தீபாவளியையும் கொசு ஒழிப்பையும் தொடர்புபடுத்தி தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்து, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், “நரகாசுரனை கொன்றதற்காகத்தான் தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதையெல்லாம் தாண்டி வெறும் கொசு ஒழிப்புக்காகத் தான் என்ற நிலைக்கு நண்பர்கள் வந்துள்ளது நல்லது. கொசு ஒழிப்பை தீபாவளி என்ற பெயரில் கொண்டாடுவது என்பது நரகாசுரன், புராணங்கள் எல்லாவற்றையும் விட்டு விலகி வந்திருப்பதைத்தான் காட்டுகிறது. இதனை விட பெரியாருக்கு வேறு என்ன வெற்றி இருக்க முடியும்” என்று கூறுகிறார்.

டெங்கு மற்றும் இதர காய்ச்சல்களால் நாள்தோறும் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், கொசு ஒழிப்பையும் தீபாவளி பட்டாசையும் தொடர்புபடுத்தி வலம் வரும் இது போன்ற கருத்துக்கள் பிரச்சனையின் வீரியத்தை புரிந்து கொண்டவைதானா? என்ற கேள்வி எழுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com